செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

கசிந்திடும் கண்ணீரைத் "திரும்பிடச்" செய்யய்யா...


        "கசிந்திடும் கண்ணீரைத் திரும்பிடச் செய்யய்யா...!" - பாகுபலி 2 திரைப்படத்தின் "வந்தாய் அய்யா!" எனத் துவங்கும் பாடலின் இந்த மிக ஆழ்ந்த அர்த்தமுள்ளது. பாடலாசிரியர் திரு. மதன் கார்க்கி எந்த எண்ணத்தில், இந்த வரியை எழுதினார் என்று தெரியவில்லை! "திரும்பிட செய்யய்யா" என்பதை, வெகு நிச்சயமாய் "துடைத்து விடய்யா" என்ற சாதாரண அர்த்தத்தில் எழுதி இருக்க மாட்டார் என்றே  எண்ணுகிறேன். ஆம்... "துடைத்து விடுவதற்கும்" மற்றும் "திரும்பிட வைப்பதற்கும்" நிறைய வித்தியாசம் உண்டு. எந்தவொரு துன்பத்தின் போதும், எவரேனும் கண்ணீரைத் துடைத்து; அத்துன்பத்திலிருந்து விடுபட வைக்கமுடியும். ஆனால், அது அந்த நேரத்திற்கான மாற்று மட்டுமே; பல துன்பங்கள், நம்மை மீண்டும்/மீண்டும் நினைவலைகள் மூலம் புரட்டிப்போடும். சரி, இது இயல்புதானே? ஆம்... இயல்புதான்! அடியோடு மாற்றிட முடியுமா?! என்றால்... மாற்றிட முடியும்! ஆனால், சாமான்யர்களால் முடியாது! பின் எவரால்...?

     பாகுபலி போன்ற ஒருவரால்! ஆம், கதைக்களத்தின் அடிப்படையில்; பாகுபலி மிகப்பெரிய பலசாலி! அவனால், முடியாதது எதுவுமே இல்லை; அதுதான், அந்தப் பாத்திரப்படைப்பின் பிரம்மாண்டம்! அதுதான், படத்தின் பிரம்மாண்டமும்! எனவே, அப்படியொருவனிடம் சாதாரணர் போன்று "வெறுமனே, துடைத்து விடய்யா!" என்று வேண்டாமல்; திரும்பிடச் செய்யய்யா என்று வேண்டுகின்றனர் மக்கள். ஆம்... கண்ணீரை மீண்டும் திரும்பிட வைத்து; அத்துன்பம் நேரும் முன்; அத்துன்ப நிகழ்வையே அழித்து விடய்யா! என வேண்டுவதாய் தோன்றுகிறது. அதுதான், பாகுபலியை சாதாரணர்கள் இடமிருந்துப் பிரித்து, வெகு உயரத்தில் வைக்கும்! இந்த அர்த்தத்தில் தான் பாடலாசிரியர் எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?" என்பது போல்; திரு. வைரமுத்துவின் மகனான திரு. மதன் கார்க்கி இப்படியோர் அர்த்தத்தில் எழுதி இருப்பின், அதில் வியப்பேதும் இருக்கமுடியாது. தொடரட்டும் அவரின் சிந்தனைகள்!

*******

பின்குறிப்பு: முதன்முதலாய், இப்பாடலை என்னவள் மற்றும் என்மகளோடு கேட்கும்போது; இதை விளக்கி "எப்படி எழுதியிருக்கார் பாரு! என்னவொரு சிந்தனை?" என்று, என்னவளிடம் சிலாகித்தேன். அதன் பின், ஒவ்வொரு முறை இப்பாடல் ஒலிக்கும்போது; என்மகள், என்னவளிடம் "கசிந்திடும் கண்ணீரைத் திரும்பிடச் செய்யய்யா!"; அம்மா! எப்படி எழுதியிருக்கார் பாரேன்! என்று சொல்லி, அவளும் சிலாகிப்பாள்! அவளுக்கு என்ன புரிந்தது என்பது சரியாய் தெரியவில்லை! ஆனால், அதை அவள் சொல்லும் அழகே - அதீத சிலாகிப்புக்கு உரியது.

- விழியப்பன் (எனும்) இளங்கோவன் இளமுருகு 
22082017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக