ஞாயிறு, ஏப்ரல் 23, 2017

இந்த ஹிந்தி எதிர்ப்பு ஆக்கப்பூர்வமானதா???


   சமீபத்தில், நெடுஞ்சாலையில் இருந்த "மைல்கற்களில்" ஆங்கிலத்தில் இருந்த ஊரின் பெயர்களை; ஹிந்தியில் மாற்றி எழுதியதை வைத்து, ஒரு சலசலப்பு எழுந்தது! எதிர்க்கட்சி தலைவர் கூட "முன்பே, முறையற்று, நடந்த ஹிந்தி எதிர்ப்பை" சுட்டிக்காட்டி, மீண்டும் ஒரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். அவரின் தமிழ் உணர்வை மட்டுமல்ல;  மற்றெவரின் தமிழ் உணர்வையும் மறுக்கும் முனைப்பு எனக்கில்லை! ஆனால், இதை தமிழ் உணர்வாய் பார்க்க; என் மனம் ஒப்பவில்லை. இது தமிழை வைத்து நடக்கும் அரசியல்! 1937-இல் முதன்முதலாய் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், 1960-களின் மத்தியில் தி.மு.க. வால் பெரிய அளவில் நடத்தப்பட்டது. மற்ற தமிழர்களுக்கு, ஹிந்தியை மறுத்துவிட்டு; தத்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஹிந்தியை கற்றுக்கொடுத்த "மறைமுக குடும்ப அரசியல்" ஒருபுறம் இருக்கட்டும். அந்தப் போராட்டத்தால், இவர்கள்/நாம் சாதித்தது என்ன?

       இன்னமும், அந்தப் போராட்டத்தைத் தம் வாழ்நாள் சாதனையாய் மாரடிக்கும் அந்நிகழ்வால் என்ன மாற்றம் நிகழ்ந்தது? 1970-களுக்கு பிந்தைய என் போன்ற தலைமுறையினருக்கு "ஹிந்தியை மறுத்தது மட்டும் தான்" சாதனை! "அதனால், தமிழ் எப்படி வளர்ந்தது?!" என்றால் ஒன்றுமில்லை. அதற்கு முன்னிருந்த தலைமுறையினரில் பெரும்பான்மையினர் "எழுத்துக் கூட்டியாவது" தமிழைப் படிக்கும் திறம் படைத்து இருந்தனர். அதற்கு பின் வந்த தலைமுறையினரில் பலரும் "ஆங்கிலம் கலவாமல் தமிழைப் பேசவே தடுமாறுகின்றனர்!"; கேடடால் "I have studied in English medium yaar" என்று பதில் வரும். இவர்களில் பலருக்கு, தமிழ் எழுத்துக்களே தெரிவதில்லை! பின்னெங்கே, எழுத்துக் கூட்டியாவது படிப்பது? ஒரு மொழியைக்  கற்பதென்பது "சுயவுணர்வு!"; அதிலும் தாய்மொழியைக் கற்பதென்பது "கர்வம் கலந்த சுயவுணர்வு!". "அந்த உணர்வு, பிற மொழியை எதிர்த்தால் தான் வ(ள)ரும்!" என்பது பேரபத்தம்!

   வெகுநிச்சயமாய், ஹிந்தியை அல்லது வேற்று மொழியை எதிர்ப்பதால்; தமிழ் வளரப் போவதில்லை! கவிதைகளாகவும்/தலையங்கங்களாகவும் இதுசார்ந்து சில பதிவுகளை எழுதி இருக்கிறேன். நா(ன்/ம்) தமிழைப் பயில்வதும்/பழகுவதும்/உபயோகிப்பதும்; என்/நம் சுயவுணர்வில் இருக்கவேண்டும்! அது இயல்பாய் எழும்/எழவேண்டும்! பிற மொழிகளை அறிந்தால் தான்; நம் தாய்மொழியின் சிறப்பை முழுதாய் அறியமுடியும்! அதனால் தான், நம் "முண்டாசுக் கவிஞன்" பழமொழிகளைக் கற்றறிந்த பின்னர்; "யாமறிந்த மொழிகளிலே" என்று சூளுரைத்தான். நாமோ, நம் தாயமொழியையும் கற்காமல்; பிற மொழியை(யும்) கற்காமல் "ஆங்கிலம் நம் முப்பாட்டனின் மொழி என்பதாய்; ஆங்கிலத்தில் கதைத்து மார்தட்டிக் கொண்டிருக்கிறோம்!" ஆங்கிலம், இந்தியாவின் மொழி கூட இல்லை! என்ற உணர்வே இல்லாமல்; ஆங்கிலம் மட்டுமே போதுமென்ற மனநிலையோடு, நாமும் வளர்ந்து; நம் பிள்ளைகளையும் வளர்க்கும் நிலையில்...

      மேற்குறிப்பிட்ட "இந்த இந்தி எதிர்ப்பு ஆக்கப்பூர்வமானதா?!" இந்த தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில், பெயர் எழுதுவதில் தெளிவான விதிமுறை சொல்லப்பட்டு இருக்கிறது! ஒவ்வொரு கி.மீ. தொலைவிற்கும் ஒவ்வொரு கலவையில் எழுதப்படுவதாய், தெளிவாய் சொல்லப்பட்டு இருக்கிறது! அதில் தமிழ் மட்டும் ஒரு கி.மீ. யிலும், ஹிந்தி மட்டும் ஒரு கி.மீ. யிலும், இந்தி/தமிழ் கலவை ஒரு கி.மீ. யிலும், தமிழ்/ஆங்கிலம் கலவை ஒரு கி.மீ. யிலும் இருப்பது போல் வரையறுத்து இருக்கிறார்கள். இதிலென்ன, ஹிந்தி திணிப்பு இருக்கிறது என்றே தெரியவில்லை! ஹிந்தி என்ற மொழி, இந்தியாவில் பரவலாய் பேசப்படும் மொழி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை! அப்படிப்பட்ட மொழியை, தேசிய நெடுஞ்சாலையில் "ஆங்காங்கே" எழுதுவதில் என்ன மொழிக்குற்றம் இருக்க முடியும்? எத்தனை பேர், அந்த மைல்கற்களை வைத்து வாகனத்தை ஓட்டுகிறோம்? குறைந்தது, அதைப் படிக்கவாவது செய்திருக்கிறோமா?!

        பெரும்பாலும், தமிழக எல்லையில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை; நமக்கோ அல்லது நாம் செல்லும் வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு பரிச்சயமானதே! நாம் அதைக் கவனிப்பது கூட இல்லை! பெரும்பான்மையில் பலனளிப்பது, அந்நியர்களான ஓட்டுனர்களுக்கு தான்! என்பதே நடைமுறை. அதில், ஆங்காங்கே "இந்தியில் எழுதுவதில் என்ன தவறு?!" இதற்கேன் இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டம்? அரசியல்வாதிகள் ஆர்ப்பரிக்கிறார்கள் என்றால், அதில் அவர்களுக்கு அரசியல் ஆதாயம் இருக்கக்கூடும்! ஆனால், நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஏன் "இந்த வெற்று ஆர்ப்பாட்டம்/விவாதம்?!" இதுதான் தமிழை அழிக்கப்போகிறது என்பதாய், ஏன் கூக்குரலிட வேண்டும்? தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில், தமிழ் மொழி பாடமாய் இல்லை? எத்தனை விழுக்காடு இருக்கமுடியும்? நம்மில் எத்தனை பேர், நம் பிள்ளைகளை "தமிழ் வழி கல்வியில்" படிக்க வைக்கிறோம்? எத்தனை பேரின் பிள்ளைகள், தமிழை "ஒரு பாடமாய் கூட"...

      படிக்காமல் இருக்கிறார்கள்? பிறகெப்படி, தமிழின் அழிவிற்கு ஹிந்தி(திணிப்பு) காரணமாய் இருக்க முடியும்? முழுக்க முழுக்க தமிழில் பதிவிடும் பிரபலங்களின் பதிவுகளில்; கணிசமான பின்னூட்டங்கள் "ஆங்கிலத்திலும்/தங்கிலீஷீலும்" இருக்கின்றன! எந்த பிரபலமும், மிகுந்த கண்டிப்புடன் "தமிழில் மட்டுமே" கருத்திடவேண்டும் என்று பணிப்பதில்லை! அவர்களுக்கு முக்கியம் "லைக்கு/காமெண்ட்டுகளின் எண்ணிக்கையே!" அவற்றை வைத்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? என்பது இன்றுவரை, எனக்குப் புரியவே இல்லை! ஆனால், அப்படிப்பட்டவர்களில் பலர்தான் "இதை ஹிந்தி திணிப்பு" என்று முழங்குகிறார்கள்! எத்தனை பெற்றோர்கள் "Daddy & Mummy" என்றழைப்பதை விரும்பி ஏற்கிறோம்?! என்பது நமக்கே தெரியும். என்மகளை, இளவயதிலேலேயே "அப்பா"வென அழைக்க அன்புக்கட்டளை இட்ட எனக்கு; "Daddy என்பதை விட; தமிழை ஒத்த "பப்பா" என்ற சொல் உயர்வென தோன்றும்!" நாம் ஒவ்வொருவரும்...

       நம் தாய்மொழியில் உரையாடுவதை வழக்கமாய் கொள்ள ஆரம்பித்தால் "எவனால்/எதனால் நம் தாய்மொழியை அழித்து; நம்முள் வேற்று மொழியை" விதைக்க முடியும்? பிற மொழிகளைக் கற்பதால், நம் தாய்மொழி அழியும் என்ற வாதம் ஆக்கப்பூர்வமற்றது! பிற மொழிகள், நம் தாய்மொழியின் புரிதலை/திறத்தை மென்மேலும் வளர்க்கவே உதவிடும்! தமிழக எல்லையைத் தாண்டிய பின்; ஹிந்தி தெரியாத ஒரே காரணத்தால், வளர்ச்சியை எட்டமுடியாதோர் எண்ணற்றோர்! இதுதான் நடைமுறை எதார்த்தம்! "அகரமுதல எழுத்தெல்லாம்" என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே, உலக மொழிகள் எல்லாமும் "அ"கரத்தில் துவங்குகிறது என்பதை உலகுக்கு உரைக்கும் அளவுக்கு மொழித்திறன் படைத்த பெருந்தகை போன்றோர் பயின்ற/வளர்த்த தமிழை; ஹிந்தியை மைல்கற்களில் ஆங்காங்கே எழுதுவதால், அழிக்க"வே" முடியாது! மாறாய், தமிழைப் பயிலாத/பழகாத, குற்றத்தால் வேண்டுமானால் அழிக்கலாம்! எனவே...

முதலில், நாம் தமிழில் பேச/படிக்க/எழுத கற்போம்! தமிழைக் காப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக