வெள்ளி, செப்டம்பர் 30, 2016

"ஆண்/பெண் உறவு" - ஓர் அலசல்! (பாகம் 1)


            "ஆண்/பெண்" என்ற இரு-துருவர்களைக் கொண்ட எவ்வகை உறவானாலும்; சிக்கலாகவே  இருக்கிறது. ஒரு பெண்ணிடம் இருந்து - "நான் எதிர்பார்க்கற மாதிரி, நீ என்னைக்கும்/எதையும் செய்தததில்லை!" என்ற குற்றச்சாட்டு எழாத; காதல்/திருமணம்/கள்ளத்தொடர்பு - இல்லாத உறவுகளே இல்லை எனலாம். தவறான தொடர்பே எனினும்; இங்கே, கள்ளத்தொடர்பையும் இணைத்தது - அதுவும், ஒருவகை உறவு என்பதால் தான்! உதாரணத்திற்கு, திருட்டைத் தொழிலாகக் கொண்ட திருடர்கள் எனினும்; அவர்களுக்குள் "கூட்டுத்திருட்டு" என்ற ஒப்பந்தம் ஏற்பட்டபின் - அவர்களும் "தொழில் தர்மத்துடன்" இருத்தல் அவசியமாகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றாமல் இருப்பதும் (அல்லது) அவர்கள் வீட்டுக்குள்ளேயே திருடாமல் இருப்பதும் அவசியமாகிறது. அதுபோல், கள்ளத்தொடர்பும் ஓர் உறவு என்பதால்தான், அதையும் இணைத்தேன். பல குற்றசாட்டுகள் உண்டெனினும்; "காதலை வெளிப்படுத்துதல்" சார்ந்த...

         எதிர்பார்ப்புகளால், விளையும் ஏமாற்றங்களால்; மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டு, பொதுவில் முன்வைக்கும் ஒன்றாக இருக்கிறது. பொதுப்புத்தியில் - "ஆண்களுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாது!" என்ற குற்றச்சாட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே; அதில், உண்மையும் இருக்கிறது. அதை மேலும் ஆழமாய் ஆராயும் முயற்சியே இத்தலையங்கம். உறவுக்குள் செல்லும் முன் - ஆண், தன் காதலை பலவகையில் எளிதாய் சொல்கிறான்.  ஆனால், அவ்வுறவு மலர்ந்த பின் - நாளடைவில், ஆண் தன் காதலை வெளிப்படுத்த தவறுகிறான் (அல்லது) வெளிப்படுத்த (தெரி/முடி)யாமல் இருக்கிறான். "காதலும் காமமும்" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் - உறவுக்குள் நுழைந்தபின் - காதலை; ஆண், காமத்தை முன்வைத்தே அணுகுகிறான். உண்மையில், தன் காமத்திற்குப் பின் - காதல் இருப்பது கூட பல ஆண்களுக்குத் தெரியாது. வெகுநிச்சயமாய், இது இயற்கையான விடயமே! இப்பதிவின் நோக்கம், ஆண்களின் தவறை...

             நியாயப்படுத்துவதில்லை! மாறாய், உண்மையை உண்மையாய் ஆராய்வது. ஒரு பெண்ணின் மேல் (காதல்/திருமணம்/கள்ளத்தொடர்பு - எவ்வுறவானாலும்) இருந்த காதல் மறைந்திட, என்ன காரணம் இருக்கமுடியும்? "வேறொரு பெண்ணுடன் தொடர்பு" போன்ற பல காரணங்களால், காதல் குறையும் வாய்ப்புண்டு. அவ்வகையினர், வேறு பிரிவில் வருவோர்; அதுபோன்ற எந்த வகையினரையும் கருத்தில் கொள்ளவில்லை! இங்கே நான் எடுத்துக் கொண்டிருப்பது, இயல்பாய் - காதலை விட்டு, விலகி நிற்கும் ஆண்களைப் பற்றியே! அப்படி விலகியோர், தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதங்களில் ஒன்றுதான் - காமம்! இப்படி, ஆண்; தன் காதலை வெளிப்படுத்துவதில் இருந்து விலகி நிற்க முழுமுதற்காரணம், உறவுக்குள் நுழைந்தவுடன் - ஆண், அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பிப்பது! ஆம், காதலன் எனில் - திருமணம்/குடும்பம் பற்றிய சிந்தனை எழும். திருமணம் எனில், அந்த எண்ணங்களுடன்; செயல் வடிவங்களும் துவங்கிவிடும்.

    மேலும், குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எண்ணமும்/செயல்திட்டமும் மேலோங்கும். கள்ளத்தொடர்பு எனில், "அந்த தொடர்பு சார்ந்த விளைவுகளை" யோசிக்க ஆரம்பிப்பான்; அவன் மறப்பினும், சூழல் - அவனை அப்படி யோசிக்க வைக்கும். ஏனெனில், கள்ளத்தொடர்பு என்பது - இரகசியமாய் செய்யவேண்டிய விடயம். ஆண்களுக்கு, இரகசியம் காக்கும் அனுபவம் இல்லை; அதை முயற்சிப்போர் கூட மிக குறைவே! அதனால் தான், ஒரு பெண்ணால் - வெகு எளிதில், ஆணின் தவறுகளை, அவன் வாயாலேயே சொல்ல வைக்க முடிகிறது. எனவே, அது சார்ந்த பயமும் அவனைத் தொற்றிக்கொள்ளும். எனவே, கள்ளத்தொடர்பில் - ஒரு ஆனால், நிச்சயம் காதலை வெளிப்படுத்த முடியாது. மன்னிக்கவும்! "கீழ்வருவது போல்" சொல்வது தவறாய் தோன்றலாம்; ஆனால், அதுதான் உண்மை: பெரும்பான்மையில், ஒரு ஆணுக்கு - அவனின் உடல் உணர்ச்சிகளின் வடிகாலாய் தான் "கள்ளத்தொடர்பு" தேவைப்படுகிறது. ஆனால், அந்த உறவிலும்....

       ஒரு பெண்ணின் நிலைப்பாடு; மற்ற உறவுகளில் இருப்பது போலவே இருக்கிறது. எனவே, எவ்வகையில் பார்த்தாலும்; ஆண், தன் காதலை வெளிப்படுத்துவதில் இருந்து விலகி இருக்கும் சூழலே அமைகிறது. "இது சரியா? தவறா?" என்றால்;  நிச்சயமாய், ஏதும் சொல்ல இயலவில்லை!. சரி - "அடுத்தக் கட்டம் பற்றி, பெண்கள் பற்றி யோசிப்பதே இல்லையா?!" என்றால்; வெகுநிச்சயம் யோசிப்பார்கள்/யோசிக்கிறார்கள்! சென்ற தலைமுறைப் பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லை! ஆனால், அதிலிருந்து விலகி; வாழ்க்கையை, காதலை மையப்படுத்திப் பார்க்கும் சூழலை - அவர்களைச் சுற்றியிருக்கும் ஆண்கள் அமைக்கிறார்கள். அது, காதலனாகவோ/கணவனாகவோ (மட்டும்) இருக்க வேண்டியதில்லை! அவர்களின், தந்தை/தமையன் போன்ற மற்ற உறவுகளாகவும் இருக்கலாம். எனவே - "அமைதியாய்/இயல்பாய்" - வாழ்க்கையை, காதலை மையப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு; ஆணுக்கு வாய்க்கவில்லை! என்பதே என் பார்வை.

"இது எப்போதுமே முடியாதா?" என்றால்;
நிச்சயம் மாறும்! அப்படித்தான் ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் முடியும்!!
"அப்படியா? எப்போது? எப்படி?" என்றால்...

தொடரும்!!!

ஆங்கில வடிவம்: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக