ஞாயிறு, ஜூலை 03, 2016

ஊடக-தர்மம் என்பது என்ன???


        சமீபத்தில் நடந்த ஓர் இளம்பெண் கொலையை பலரும் பார்த்திருப்பினும்; அதைத் தடுக்க/தவிர்க்க ஏன் ஒருவரும் முன்வரவில்லை?! என்ற கேள்வியை; ஒரு சாமான்யனின் பார்வையைத் தாண்டி - அந்த தயக்கத்திற்குப் "பின்னிருக்கும் பயத்தை" விளக்கி ஒரு தலையங்கத்தை நேற்று எழுதி இருந்தேன். அதைப் பலரும் படித்திருக்கக் கூடும்; அதில் சொல்லப்படட "காவல்துறை/நீதித்துறை" பயத்தைத் தாண்டி - வேறோர் பயமும் "அடுத்த கட்டமாய்" ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அது, ஊடகங்கள் தங்களுடைய "தர்மம் மற்றும் உரிமை" என்ற தவறான புரிதலில் செய்யும் அத்துமீறல்கள் தான் - என்பதை மறுப்பதற்கில்லை. அதைத்தான் இப்படியோர் பதிவாய் எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போதே, மேற்குறிப்பிட்ட கொலையின், கொலையாளி பிடிபட்டதாய் செய்திகள் வெளிவந்தது. இதை ஓர் உதாரணமாகக் கொண்டே, ஊடகங்களின் அடாவடித்தன்மையை உணரமுடிந்தது.

       இதுவரை வெளிவந்திருக்கும் செய்திகளின் அடிப்படையில், கொலையாளி தன்னை மறந்த/இழந்த நிலையில்தான் அந்தக் கொலையைச் செய்ததாய் தெரிகிறது. வரும் தினங்களில், அந்த இளைஞர் முற்கூட்டியே திட்டம் செய்து இந்தக் கொலையை செய்ததாய் கூட நிரூபணம் ஆகக்கூடும். அந்த இளைஞருக்கு கொலை செய்வது பழக்கமான செயலாய் கூட இருக்கட்டும். ஆனால், அந்த இளைஞரின் குடும்பத்தைப் படம் பிடித்தும்/காணொளியாய் காண்பிக்க - ஊடகங்களுக்கு எவர் அதிகாரம் கொடுத்தது?! அவருக்கு - இத்தனை உடன்பிறப்புகள் இருக்கிறார்கள்/அவரின் பெற்றோர் இவர் என்று வெளிச்சம் போட்டு காட்டும் அதிகாரத்தை இவர்களுக்கு எவர் கொடுத்தது?! அவர்களுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்? அந்த இளைஞர் செய்த தவறுக்கு - அவரின் குடும்பத்தார் என்ன செய்வர்? அவர்களின் வாழ்வியல் பாதிக்காதா? இது அந்த இளைஞரின் செயலை நியாயப்படுத்தும் முயற்சி அல்ல!

     மாறாய், இப்படி முறையற்ற வகையில் - அவரைச் சார்ந்தவர்களையும் குற்றவாளி போல் சித்தரிக்கக் கூடாது என்பதே இந்த தலையங்கத்தின் பார்வை. அதுபோல், அந்த இளைஞரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரிடம் - விசாரணை போன்ற தோரணையில் பற்பல கேள்விகள் கேட்கின்றன ஊடகங்கள்! அதில், வழக்கைத் திசைதிருப்பும் வகையில் கூட பல தவறான கேள்விகள் இருக்கின்றன - இவர்களுக்கு யார் அப்படி கேள்விகள் கேட்க அதிகாரம் கொடுத்தது? பின், காவல்துறை எதற்கு இருக்கிறது? என்னவிதமான மனநிலை இது? என்ன கீழ்த்தரமான விளம்பரத் தேடல் இது? இவர்களின் ஊடகம் "நம்பர் 1" என்று காண்பிக்க; இவ்வளவு தரம் தாழ்ந்து போகவேண்டுமா?!  மேலும், அதை நேற்று ஆரம்பித்தது முதல் இன்றுவரை - மீண்டும், மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டே இருக்கின்றனர். செய்தி(யை/யாய்) சொல்லலாம்! ஆனால், அதை சுருங்க சொல்லி - அதையும் அவர்கள் சொல்லும் "ஊடக தர்மத்தின்" வரையறைக்கு...

    உட்பட்டு தானே இருக்கவேண்டும்? இதுபோன்ற, தேவையற்ற/நியாயமற்ற வகையில் - விசாரணை போன்ற தோரணையில் ஊடகங்களின் அராஜகம் - ஒரு தனிமனிதனை இம்மாதிரியான துரதிஷ்ட்டமான கொலையில், சாட்சி சொல்ல தடுக்கிறது என்பது என் பார்வை. அதுபோல், சில கேடுகெட்ட ஊடகங்கள் கொலையான பெண்ணின் பல்வேறு வகையான புகைப்படங்களை வெளியிடுகின்றன. சமூக வலைதளங்களிலும் இந்த அடாவடிகள் தொடர்கின்றன. அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பகிரும் அதிகாரத்தை இவர்களுக்கு எவர் கொடுத்தது? மேற்குறிப்பிட்ட, நேற்றைய தலையங்கமும் இந்த கொலையோடு தொடர்புடையதே! எல்லோரும் செய்கிறார்கள் என்றெண்ணி - நானும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம்! ஆனால், அந்தப் பெண்ணின் பெயரைக் கூட நான் குறிப்பிடவில்லை! அதுபோல், அந்த இளைஞரின் பெயரைக் கூட நான் குறிப்பிடவில்லை! அது இங்கே முக்கியமில்லை - அது என் நோக்கமும் இல்லை!

     அந்த தலையங்கத்தில் வெளியிட்ட புகைப்படம் கூட இணையத்தில் இருந்து எடுத்ததே! உண்மையில், அந்தப் புகைப்படத்தில் ஒரு புகைவண்டியின் பின்புறமும்; அதில் தொடர்வண்டித் துறை ஊழியர் ஒருவரின் உருவமும் இருந்தது. அதைக்கூட வெளியிட நான் விரும்பவில்லை - எனக்கு அந்த உரிமையும் இல்லை! அதைக் கத்தரித்து விட்டுத்தான் அந்தப் புகைப்படத்தையே வெளியிட்டேன். இது ஏன், பிரபல ஊடகங்களுக்கு தெரிவதில்லை?! வளைகுடா மற்றும் அமீரக நாடுகளில் - ஒரு குற்றச் செய்தி வருகிறது என்றால் - அது சம்பந்தப்பட்டவர் புகைப்படம் எதையும் பார்ப்பது அரிது! செய்தியில் கூட, சம்பந்தப்பட்டவர் பெயர் - குற்றத்தின் தன்மையைப் பொறுத்தே குறிப்பிடப்படும். பல குற்றங்களுக்கும் - இந்த நாட்டைச் சேர்ந்தவர், இந்த வயதுக்காரர் - என்பதைத் தாண்டி பல செய்திகளில் மேற்கொண்டு விவரம் இருக்காது. தேவையற்ற விவரங்களைத் தெரிந்துகொள்வது தனிமனிதனுக்கு தேவையற்றது! என்ற ஊடக-தர்மம் அவர்களுக்கு...

      தெரிந்திருக்கிறது! பல நாடுகளில், பெரிய குற்றங்கள்/விபத்துகள் - அந்நாட்டு ஊடகங்களில் கூட வெளிவராது; நம்மூர் செய்திகள் உடனடியாய் உலகளவில் தெரிகிறது. சர்வாதிகாரம் எனினும் - அந்நாடுகளின் செயல் நியாயமாகவே தெரிகிறது. ஒரு தனிமனிதனாய் - எனக்கு, ஒரு கொலை நடந்தது; கொல்லப்பட்டது ஒரு பெண், இன்ன வயது போன்ற அத்தியாவசிய விவரங்களைத் தாண்டி - அந்த பெண்ணின் புகைப்படமோ; அதிலும் குறிப்பாய், அந்த பெண்ணின் பலவிதமான புகைப்படங்களோ தேவையற்றது! செய்திதான் முக்கியம் - அதுபோல், இனி வேறொரு சம்பவம் நடைபெறக் கூடாது - என்ற சமூக அக்கறை தான் முக்கியம். அது போலவே, அந்த இளைஞர் பற்றிய தேவையற்ற தகவல்களும் தேவையில்லை. குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய - தேவையற்ற தகவல்கள் தேவையில்லை எனும்போது; கொலை செய்தவரின் பக்கத்து வீட்டுக்காரர் பற்றிய தகவல்கள் எனக்கெதற்கு? காவல்துறை போன்றவர்களுக்கு அத்தகவல்கள்...

        அத்தியாவசியமானது! அதை ஏன், இந்த ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டவேண்டும்?! வியாபாரம் எனும் மூன்றாம் தர சிந்தனை; இப்படியெல்லாம் செய்யத் தூண்டுமா? இதுவா, இவர்கள் கோரும் ஊடக சுதந்திரம்? இதுவா, ஒரு ஜனநாயக சுதந்திரம்? இறந்தது ஊடகக்காரர்களின் உறவென்றால், இப்படித்தான் செய்வார்களா? அதுபோல்... அந்தப் பெண் நமக்கு உறவென்றால் - நாம் இப்படித்தான் ஆர்வம் காட்டி - அந்தப் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்வோமா? இம்மாதிரியான "அடாவடித்தனமான" செயல்கள்தான் - ஒரு தனிமனிதனை "நமக்கேன் வம்பு?!" என்று ஒதுங்கி இருக்கச் செய்கிறது! ஊடங்கங்கள் போலவே, நாமும் - சமூக வலைத்தளங்களில், நம் அடாவடித்த தனத்தை செய்துவிட்டு; மிக எளிதாய் காவல்துறை/நீதித்துறை மற்றும் அரசைக் கேள்வி கேட்கிறோம்! இப்படி பொறுப்பில்லாமல், இந்த ஊடகங்களும்; நாமும் சமூக வலைதளம் மூலம் தேவையற்ற விடயங்களை "புரளியாய் பரப்பும்" வரை...

குற்றத்தை நேரில் பார்த்த மனிதர்கள் எப்படி சாட்சி சொல்ல வருவர்???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக