சனி, ஜனவரி 09, 2016

அதிகாரம் 016: பொறையுடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 016 - பொறையுடைமை

0151.  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
           இகழ்வார்ப் பொறுத்தல் தலை

           விழியப்பன் விளக்கம்: தன்னைத் தோண்டும் மக்களை, சுமக்கும் நிலத்திற்கு ஒப்ப;  
           தீயசொற்களால் நம் மனதைக் காயப்படுத்துவோரை, பொறுத்தருளுதல் தனிச்சிறப்பாகும்.
(அது போல்...)
           தம்மைக் கைவிட்ட பிள்ளைகளை, ஆசிர்வதிக்கும் பெற்றோர் போல்; புரளியால் நம் 
           மதிப்பை சிதைப்போரை, அரவணைத்தல் தனித்துவமாகும்.

0152.  பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை 
           மறத்தல் அதனினும் நன்று

           விழியப்பன் விளக்கம்: மிகையான தீங்கைப் பொறுத்தருளுதல் என்றும் நன்றே; அந்தத்
           தீங்கையே மறந்துவிடுதல், அதைக்காட்டிலும் நன்றாகும்.
(அது போல்...)
           அதீதமான கோபத்தை அடக்குதல் எப்போதும் சிறந்ததே; அக்கோபத்திற்கான
           நிகழ்வையே மறப்பது, அதனினும் சிறந்ததாகும்.

0153.  இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் 
           வன்மை மடவார்ப் பொறை

           விழியப்பன் விளக்கம்: விருந்தினரை உபசரிக்கமுடியாதது, வறுமையில் வறுமையாம்; 
           அதுபோல், அறிவிலிகளைப் பொறுத்தருள்வது - வலிமையில் வலிமையாம்.
(அது போல்...)
           மனிதத்தைப் பின்பற்றாதோர், விலங்குகளில் கொடுவிலங்காம்; அதுபோல், 
           மனிதமற்றவரையும் நேசிப்போர் - மனிதரில் மாமனிதராம்.

0154.  நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
           போற்றி யொழுகப் படும்

           விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றிலும், நீங்காத நிறைவைக் கொண்டிருக்க விரும்பினால்; 
           பொறுத்தருள்வதை, உயர்வாய் பேணி ஒழுகவேண்டும்.
(அது போல்...)
           எக்காலமும், இறவாதப் பிறப்பை அடைந்திட விரும்பினால்; மனிதத்தை, சுவாசமாகப் 
           பழகி வாழவேண்டும்.
          
0155.  ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் 
           பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

           விழியப்பன் விளக்கம்: மற்றவர்களைப் பொறுமையின்றி தண்டிப்போரை; சான்றோர், 
           பொருட்படுத்த மாட்டார்கள்! அங்ஙனம் பொறுத்தருளும் இயல்பினரைப், பொன்போன்று 
           பாதுகாப்பர்.
(அது போல்...)
           பிறரை மனிதமில்லாமல் அனுகியவரை; உயர்ந்தோர், அவமதிக்க மாட்டார்கள்! ஆங்கே 
           மனிதத்தோடு அணுகுவோரை, உயர்-சக்தியாய் போற்றுவர்.

0156.  ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் 
           பொன்றுந் துணையும் புகழ்

           விழியப்பன் விளக்கம்: பிறர் தவறைத் தண்டிப்பார்க்கு, ஒருநாளே மகிழ்ச்சி; அத்தவறைப் 
           பொறுத்தருள்வோர்க்கு, உலகம் அழியும் வரை சிறப்பிருக்கும்.
(அது போல்...)
           பிறர் அறியாமையைப் பழிப்போர்க்கு, ஒருகணமே மனநிறைவு; அவ்வறியாமையை 
           நீக்குவோர்க்கு, வாழ்நாள் இறுதி வரை முழுமையிருக்கும்.

0157.  திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து 
           அறனல்ல செய்யாமை நன்று

           விழியப்பன் விளக்கம்: பிறர், நமக்கு செய்யத் தகாதவற்றைச் செய்தாலும்; அதனால் மனம் 
           வருந்தி, அறனல்லாதவற்றை செய்யாமல் பொறுத்தருளுதல் நலம்.
(அது போல்...)
           மற்றவர், நம் உரிமைகளை மறுத்துச் செயல்பட்டாலும்; அதனால் தன்னிலை-இழந்து,  
           பகையை வளர்க்காமல் இருப்பது சிறப்பு.

0158.  மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
           தகுதியான் வென்று விடல்

           விழியப்பன் விளக்கம்: அதீதத்தால், தீயவை செய்தோரின் மனதை; நம் பொறுத்தருளும் 
           தகுதியால், வெல்லவேண்டும்.
(அது போல்...)
           சர்வாதிகாரத்தால், அவமரியாதை செய்தோரின் சுயத்தை; நம் மனிதநேய குணத்தால், 
           மாற்றவேண்டும்.

0159.  துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் 
           இன்னாச்சொல் நோற்கிற் பவர்

           விழியப்பன் விளக்கம்: பிறரின், எல்லையற்ற தீச்சொற்களையும் பொறுத்தருள்பவர்; 
           எல்லாப் பற்றுகளையும் துறந்தவரைப் போன்று, புனிதமானவர் ஆவர்.
(அது போல்...)
           உறவுகளின், எண்ணற்ற வரம்பு-மீறல்களையும் மன்னிப்போர், ஐந்து புலன்களையும் 
           அடக்கியோரைப் போன்ற,  மனத்திடம் கொண்டவராவார்.

0160.  உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 
           இன்னாச்சொல் நோற்பாரின் பின்

           விழியப்பன் விளக்கம்: உணவைத் தவிர்த்து நோன்பிருப்போர்; பிறர் பேசும் தீய 
           சொற்களைப் பொறுத்தருள்வோர்க்கு, அடுத்த நிலையே அடைவர்.
(அது போல்...)
           அறமற்றதை மறுத்து வாழ்வோர்; பிறர் செய்யும் மனிதமற்ற செயல்களை மன்னிப்போர்க்கு, 
           அடுத்த போற்றுதலையே பெறுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

2 கருத்துகள்: