ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

"அவித்த" மணிலாக்கொட்டை...



      நேற்று-முன்தினம், சில மாதங்களுக்கு முன் ஊரிலிருந்து; இங்கே அபுதாபிக்கு கொண்டுவந்த "காய்ந்த மணிலாக்கொட்டை" கண்ணில் பட்டது! காய்ந்ததை அதிகம் தின்னவும் முடியாது; தின்பது நல்லதும் அல்ல! (தாய் சொல்வ"தாயும்" காதில் கேட்டது!). காய்ந்ததை ஏன் நாம் மீண்டும் பச்சையாய் ஆக்கக்கூடாது?! என்ற கேள்வி வந்தது (Reverse Process). உடனே, அதை தண்ணீரில் ஊற-வைத்துவிட்டேன்; பின் வழக்கம்போல் என்தமக்கைக்கு அலைபேசி-செய்து "அவிக்கும்" (வேகவைக்கும்) விதத்தை கேட்டேன்! எதிர்பார்த்தது போலவே "என்தமக்கை உடனடியாய் கேட்ட கேள்வி: அங்க பச்சை-மல்லாட்டெல்லாம் கெடைக்குதாடா?" என்பதே. என் யோசனையை சொன்னேன்; சரிடா! நல்லா ஊறட்டும் என்றார். நானும், அடுத்த நாள் மாலை வரை ஊறவைத்து, பின்னர் அவித்தேன். என்-தமக்கையும், என்-தாயும்; திறந்த-பாத்திரத்தில் அவிப்பது போல் அவிக்கவேண்டும் என்றெண்ணி, பின்னர் என்-தமக்கை சொனனது போல் "குக்கரில்" அவித்தேன்.

          அவித்தது அருமையான பதத்தில் இருந்தது; அடுத்த முறை நான் அலைபேசி-செய்யும்போது என்-தமக்கை முதலில் கேட்கும் கேள்வி "மல்லாட்டையை அவிச்சியா? எப்படி இருந்தது??" என்பதாய்தான் இருக்கும். நான் (என்தமக்கையின் வழிகாட்டுதலின் படி) பொங்கல் முதல் - பிரியாணி வரை செய்வேன் என்பதால், மணிலாக்கொட்டையை அவிப்பது பெரிய விசயம் என்றில்லை என்றிருந்தேன்! ஆனால், அது அத்தனை எளிதல்ல; அதில் இருக்கும் மண்ணை-கழுவி களைவதில் இருந்து, அளவான உப்பிடுதல் வரை - பல சிரமங்கள் இருந்தன. உப்பின் அளவு - மாறுபட்டால், மற்ற உணவு-வகைகள் போன்று "பெரிதாய்" எந்த மாற்றமும் செய்யமுடியாது. சென்ற முறை இந்தியா சென்றபோது கூட 3-படி மணிலாக்கொட்டை வாங்கிக்கொடுத்து என்-தமக்கையும்/என்-தாயும் சேர்ந்தே அவித்தது நினைவுக்கு வந்தது. ஒன்று கவனித்து இருக்கிறீர்களா? நம் வீட்டு பெண்கள் எத்தனை படி மணிலாக்கொட்டை அவித்தாலும்; அவிக்கும்போது "ஒன்றிரண்டாய்" சுவை பார்ப்பதை தவிர...

அவித்த பின் (பெரும்பான்மையில்)அவர்கள்; ஒன்றைக்கூட தின்பதில்லை!!!           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக