ஞாயிறு, டிசம்பர் 15, 2013

நான் ஏன் எழுதுகிறேன்???




        என் நண்பர் ஒருவர் சமீபத்தில் "அண்ணா! உங்கள் எழுத்து போரடிக்குது!!" என்றார். நாங்கள் பலதும் விவாதித்தோம்; (எனக்கு புரிந்த அளவில்)அவருடைய குற்றச்சாட்டு "என்னுடைய  பதிவில் எந்த முடிவும் இல்லை; அது ஒருதலையாய் இருக்கிறது" என்பனவே! நானும், என்னுடைய எழுத்து முறை பற்றி என்னப்பன் குறிப்பிட்டதை அவருக்கு நினைவூட்டினேன்; அதே "எழுத்துச்-சித்தர் பாலகுமாரன்" தாக்கம்-தான் "இன்னவென்ற முடிவை" நான் சொல்லாமல் இருக்க காரணம். நான் எழுதி இருக்கும் பல தலையங்களுக்கு "இதுதான் முடிவென்பதே, இல்லை!" என்பது எனக்கு தெரியும். நான் எனக்கு தெரிந்த நியாயங்களை (என் பக்கத்து நியாயம் அல்ல; எனக்கு தெரிந்த நியாயம்!) அடிப்படையாய் கொண்டு தான் எல்லாம் எழுதுகிறேன்; எனக்கு அந்த நியாயங்கள் பெரும்பான்மையில் இருக்கின்றன என்று தெரிந்தால் மட்டுமே - அது பற்றி எழுதிகிறேன். மற்றபடி, எனக்கு இது பற்றி தான் எழுதவேண்டும்; இவர் பற்றி தான் எழுதவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. 

        அதனால் தான், பெண்ணியம் பற்றி யோசிக்க/அது பற்றிய செயல்கள் செய்யும்; அது பற்றி எழுதும் - அதே வேளையில், பெண்ணியம் தவறான பாதையில் செல்கிறது என்பதையும் என்னால் எழுத முடிகிறது. என் பெண்ணைப்பற்றி வானளாவ புகழும் அதே வேளையில் (4 வயதே ஆன)என்மகளின் வருங்கால வாழ்க்கை பற்றி யோசித்து "என் வருங்கால மருமகனிடம்" எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்க முடிகிறது. "மரணத்திற்கு பிறகு, என்ன...???" என்ற கேள்வியே என்னுடைய எல்லா தேடல்களுக்கும்/ எல்லாவற்றின் மீதான புரிதல்களுக்கும் காரணம். இங்கே, என் விருப்பும்-வெறுப்பும் எதுவும் இல்லை; நான் உண்மையின்-விளிம்பில் நின்று எல்லாவற்றையும் ஆராய முற்படுகிறேன். அதனால், வழக்கமான சுவராஸ்யங்கள்  இல்லாதிருக்கக்கூடும். என் நண்பரால் என்ன குறைகிறது என்று சரியாய் கூற முடியவில்லை; அப்படி எதுவும் இருப்பின் - அவரோ! இல்லை வேறெவரோ!! எனக்கு சரியாய் விளக்கும் பட்சத்தில் - அதை நிவர்த்தி செய்துகொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

        என் நண்பருடனான விவாதத்திற்கு பின் - எனக்குள் நான் யோசிக்க ஆரம்பித்தேன்! என்னுள் "நான் ஏன் எழுதுகிறேன்?!" என்ற கேள்வி எழுந்தது. அந்த தருணத்தில் "எழுத்துச்-சித்தர்" அவர்களின் பேட்டி ஒன்றை காண நேர்ந்தது. ஆரம்பத்தில், இது போன்ற சூழலை எதிர்கொண்டபோது அவரும் அப்படி யோசித்தாய் கூறினார்; எழுதுவது அவருக்கு பிடித்து இருப்பதாயும், எழுதுவது அவரை தெளிவு-படுத்துவதாயும், நேர்மை-படுத்துவதாயும் குறிப்பிட்டு இருந்தார். உடனே, என் அடிமனதில் அதே போன்ற உணர்விருப்பது தெரிய வந்தது; மேலோட்டமாய் நான் அப்படி யோசித்ததுண்டு எனினும் - அவர்போல் ஆழ சென்று யோசிக்கவில்லை. உண்மை தான்! உண்மை பால் எனக்கு இருந்த நட்பு இன்னமும் நெருக்கமாய் ஆகி இருக்கிறது; எனது "உண்மையின் தரம்" வெகுவாய் உயர்ந்து இருக்கிறது. நான் கோபமாய் பார்த்த பல விசயங்களை/நிகழ்வுகளை நிதானமாய் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்; பொய்யிலிருந்து "இன்னும் வெகு-தூரம்" போக ஆரம்பித்திருக்கிறேன்.

        அந்த நிதானம் - உறவு மற்றும் நட்பு சார்ந்த என்னுடைய புரிதலை அதிகமாக்கி இருக்கிறது; செயலில் ஓர்தெளிவு வர ஆரம்பித்து இருக்கிறது; மற்றவர்களின் குற்றச்சாட்டை "எடுத்தவுடன் அலட்சியம் செய்துவிட்டு பின்னர் யோசிப்பது போய்", உடனுக்குடன் குற்றச்சாட்டை ஊடுருவி பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த குறைகளை உடனடியாய் களைய-முற்படுகிறேன். "எழுத்துச்-சித்தர்" சொல்லியது போல் எழுதுவது ஓர் வரம்! பிடித்திருப்பதால் அதை செய்வதாய் சொன்னார்; எனக்கும் அப்படித்தான்! எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது! எதை வேண்டுமானாலும், எழுதலாம்; ஆனால், அதில் உண்மை இருக்க வேண்டும் என்றார். ஆம்! என்னுடைய எழுத்துக்களில் - ஆரம்பம் முதல் உண்மை மட்டுமே இருக்கிறது; என்னுடைய எழுத்துக்கள் என்னை நேர்மையாய், உண்மையாய் இருக்க உதவுவது போல் - "வெகு சிலரையாவது" அப்படி இருக்க வைத்தால் போதுமானது; அதற்காகத் தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

       சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்டவர் நிலை கருதி, சில உண்மைகளை நான் (நேரடியாய்)எழுதாது போனதுண்டு!; ஆனால், பொய்யாய் எதுவும் எழுதியதில்லை/எழுதப்போவதுமில்லை! என்மகளுக்காய் "சற்றும்-பொய் கலக்காமல்" எழுதுகிறேன். இந்த 4 வயதில், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் நான் அவளுடன் இல்லை; என் குடும்பத்தை விட்டு 25 ஆண்டுகள் வெளியே வாழ்ந்து வருகிறேன்; அதில் 10 விழுக்காடு தான் எனினும், என்னை வெகுவாய் பாதித்திருப்பது என்மகளுடனான பிரிவு! "வாழ்க்கை என்னவென்று, அவள் ஆராயும்போது", நான் உயிர்த்திருப்பேனா??!! என்று தெரியவில்லை. என்னுடைய எழுத்துக்கள் இருக்கும்; அவள் என்னுடைய எழுத்துக்களை என்றேனும் ஓர்நாள் படிப்பாள் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது. "என்னைவிட, வேறெவர்?! என்னைப் பற்றி" என்மகளிடம் - உண்மையாய் விளக்கிட முடியும்? வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வித்தையை விட, வேறென்ன என்மகளுக்கு "பெரிதாய்" கொடுத்திட முடியும்??? எனவே, வெகு நிச்சயமாய் நான் எழுதுவது...

நான் புரிந்திட்ட வாழ்வியலை; (மற்றவர்/என்ம)களுக்கும் விளக்கிடவே!!!

பின்குறிப்பு: எழுத்தில் - பெரிதாய் "பொய்யை" கலந்து விடமுடியாது; பேசும்போது பொய் சொல்லிவிட்டு, பிறகு இல்லை என்று சாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதுவும், பொய்யென்று பின்னால் நிரூபிக்கப்படலாம்; அல்லது அவரே ஒப்புக்கொள்ளலாம்! ஆனால், அதுவரை அந்த பொய் காக்கப்படும்; அதனால், பலரும் பலதும் அனுபவிக்கக்கூடும். எழுத்தில், அது சாத்தியமன்று; உண்மை இல்லை எனில், "தன் நெஞ்சே தன்னைச்சுடும்!"; நம் சுயத்தை இழப்பது நமக்கே தெரியும்;  "சுயத்தை உண்மையாய் நேசிப்போர் எவர்க்கும்" - மெய்யுணர்ந்தே சுயத்தை இழத்தல் சாத்தியமன்று! குறுகிய-காலத்திற்கு வேண்டுமானால், பொய்யாய் ஏதும் எழுதிக்கொண்டு இருக்கலாம்; ஒர்காலகட்டத்தில் அது தானாய் நின்றுவிடும். என்னுடைய எழுத்துக்கள் - இப்போதில்லை எனினும், என்றேனும் ஓர்நாள் பலரையும் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு மிகுந்திருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக