ஞாயிறு, ஜூன் 09, 2013

எத்தனை குழந்தைகள் வேண்டும்???



      மீண்டும் ஓர் முறை "நீயா நானா" விவாதித்த தலைப்பின் அடிப்படையில் இந்த தலையங்கத்தை எழுதி இருக்கிறேன். சமீபத்தில் - ஒரு குழந்தை போதும் என்று ஓர் பிரிவினரும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வேண்டும் என்றோர் பிரிவினரும் - வாதாடும் நிகழ்ச்சியை (05.05.2013)  கண்டேன். ஓர் குழந்தை வேண்டும் என்றவரில் பெரும்பான்மையோர் கூறியது "பொருளாதார நெருக்கடி" என்பது தான் - இது என்னளவில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சிலர் உடல்நிலை சரியில்லை என்ற வாதத்தை வைத்தனர் - இது உண்மையான காரணியாய் இருக்கும் நிலையில், மருத்துவமும் ஏதும் செய்யமுடியாது எனும்போது கண்டிப்பாக மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளக்கூடியதே!!! முதல் குழந்தையே பிறக்கவில்லை எனின் - அவர்கள் எந்த மருத்துவத்தையும் எதிர்கொண்டு குழந்தை பெற்றிட தயாராயிருப்பர் தானே?! அதனால் தான், அப்படி சொன்னேன்!! யாராவது ஒருவர் ஒரு-குழந்தை மட்டும் இருந்து - அந்த குழந்தை "ஏதேனும் ஓர் காரணத்தால் இறந்துவிட்டால்" என்ற கோணத்தில் பேசுவர் என்று எதிர்பார்த்து வெறும் ஏமாற்றமே மிஞ்சியது! ஆனால், இறுதியில் சிறப்பு விருந்திர். திரு மோகன் அவர்கள் இது பற்றி ஆழ்ந்து பேசினார் - முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் "உயிரியல் முன்னோக்கு (Biological Perspective)" என்ற அடிப்படையில் விளக்கினார்; எனக்கு அந்த அறிவியல் சார்ந்து போதிய அறிவில்லை எனினும் - அதன் அடிப்படை தெளிவாய் புரிந்தது; மேலும் எனக்கு அது பெருத்த அதிர்ச்சியாய், அதிசயமாய் தெரிந்தது; அதை கீழே சுருங்க விளக்கியுள்ளேன்.

     அவர் முதலில் கூறியது ஓர் குழந்தை என்பது DEATH-WISH என்று! அதாவது, மனித இனத்தை அழிக்க முனையும் விஷயம் என்று கூறினார். "தசம செயல்முறை (Decimation Process)" அடிப்படையில், பிறக்கும் 10 குழந்தைகளில் 9 குழந்தைகள் இறப்பதற்காகவே பிறக்கின்றனவாம்! அதாவது ஒரேயொரு குழந்தைக்கு(மட்டும்) தான், அனைத்து விதமான எதிர்ப்பு சக்தி மற்றும் உயரிய உயிரணுக்கள்  இருக்குமாம். இப்போதைய விஞ்ஞானம் மற்றும் மருத்துவ வளர்ச்சி காரணமாய் தான் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகளை உயிர்த்திருக்க செய்திருக்கிறார்களாம்! அதாவது, இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறதாம்! ஏதேனும் ஓர் சூழலால், இந்த இறப்பு விகிதம் சிறிது உயர்ந்தாலும் கூட அது மனித குலத்திற்கே மிகப்பெரிய கேடாகுமாம்! அதனால், "சரியான வித்து கொண்ட குழந்தை" என்று உருவாகும்போது வேண்டுமானால், ஓர் குழந்தை என்பது சரியாய் வருமாம். "சென்டினல்" என்ற அந்தமான் & நிகோபார் தீவுகளில் ஒன்றான ஓர் தீவில் ஓர் இனத்தையே தனியாக வைத்து மருத்துவ-ஆராய்ச்சி செய்து வருகின்றனராம்! எவரும் அங்கு செல்லக்கூட அனுமதி கிடையாதாம்!! அப்படி இருக்கையில், பொருளாதாரம் மற்றும் அது போன்ற ஆதா(ர/ய)மற்ற காரணிகளால் - ஓர் குழந்தை போதும் என்று வரையறுப்பது எப்படி நியாயமாகும்? அது மனித இனத்திற்கு நாம் செய்யும் துரோகமாய் ஆகிவிடாதா?? என்னுடைய பல முந்தைய தலைமுறைகளின் ஆணிவேர் நான்! அதை தொடர்ந்திட எனக்கு 2 குழந்தைகளாவது வேண்டும் - என்று தானே நாம் யோசிக்கவேண்டும்!!

       மேலும், அப்படி நாம் ஓர் குழந்தை என்று வரையறுத்து - ஏதேனும் ஓர் சூழ்நிலையில் அந்த குழந்தை இறந்துவிட்டால்?! அதிலும் பெற்றோர்களுக்கு 50-ஐ தாண்டிய அகவை ஆகும்போது அவ்வாறு நேர்ந்திடின்?? நாங்கள் 3 பிள்ளைகள் இருந்தும் - "ஒன்றரை" வயதில் இறந்துவிட்ட தன் மூத்த குழந்தையை (நாங்கள் பார்த்திடாத எங்கள் அண்ணனை - அவரின் பெயர் "செம்பியன்") எண்ணி இன்றும்கூட கண்ணீர் வடிக்கின்றார் - என் தாய்! நாங்களும் இல்லை என்ற நிலையிருந்திருப்பின் என் பெற்றோரின் நிலை என்னவாய் இருந்திருக்கும்? சமீபத்தில் நான் இந்தியாவில் விடுப்பில் இருந்த சமயம் 30 அகவை கடந்த என் நண்பனின் இளைய-தம்பி விபத்தில் இறந்துவிட்டான் - மிகவும் திடமானவான் தான்! அந்த பெற்றோர் அழுதது இன்னும் நெஞ்சில் பசுமையாய் நினைவிருக்கிறது!! எதுவும் நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில், ஒன்று மட்டும் போதும் என்று எப்படி வரையறுக்கமுடியும்? மேலும், திரு. மோகன் அவர்கள் கூறிய இன்னுமொன்றை நினைவு கூறுகிறேன்: ஒரு பெண்ணால் இத்தனை குழந்தைகள் தான் பெறமுடியும் என்ற எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறதாம் - இயற்கையாய்!!! அது ஒர்சூழலில் ஒன்றேயொன்று அல்லது இல்லவேயில்லை என்ற இலக்கை தானே அடையுமாம்! அது மனித குளம் அழிவதற்கான ஆரம்பமாய் கூட இருக்கலாம்!! அப்படி இருக்கையில், இயற்கையை எதிர்த்து ஒரேயொரு குழந்தை - எத்தனை உயரிய வித்து என்பதை அறிந்திடாது - என்று, நாமே அப்படி வரையறுப்பது எப்படி நியாயமாகும்?

        சென்ற தலைமுறையினர் 7, 8 என பிள்ளைகள் பெற்றது மேற்கூறிய "உயிர் பொறிமுறையனை" நிகழ்வால் கூட இருக்கலாம்! இப்போது, மருத்துவ வசதி பல உள்ளதால் அவ்வளவு குழந்தைகள் தேவையில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை!! ஆனால், இன்னமும் இயற்கையாய் தரமான-வித்துள்ள குழந்தை அமையாத நிலையில், 2 குழந்தைகளாவது வேண்டும் என்பதே ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கமுடியும்!!! அந்த நிகழ்ச்சியில் ஒர்குழந்தை போதுமென்று பேசியவர்களில் பெரும்பான்மையோனோர் பெண்கள்; இதில் அவர்களின் கணவன்களுக்கு முழு சம்மதம் இருக்கிறதா என்று தெரியவில்லை! பலபெண்கள் - தங்களுக்கு மட்டும் தான் குழந்தை பெறுவதற்கு இயல்பு இருக்கிறது; தங்கள் கணவனை பழிவாங்க இது ஓர் வாய்ப்பு என்ற அடிப்படையில் கூட - மறுக்கின்றனர். குழந்தை பெரும் இயல்பு இல்லாதது ஆண்கள் தவறல்ல!! அல்லது அவர்கள் அதிலிருந்து விலகிடவில்லை!!! தாயுமானவன் என்ற புதுக்கவிதை கூட இம்மாதிரி ஆதங்கத்தின் மறு-வெளிப்பாடே!!!! என்றோ, பெண்கள் என்பவர்கள் குழந்தைப் பெறுவதற்கு தான் என்று நடந்திட்ட கொடுமைகளின் "எதிர்-வினையாய்" இதைப் பார்க்க தோன்றுகிறது. இம்மாதிரி ஓர் எதிர்வினை நிகழ்கிறது என்பதை நான் திடமாய் நம்புகிறேன்; அதனால் தான் இதை தொண்டர்ந்து வலியுறுத்திக்கொண்டே வருகிறேன். அது இன்னும் பரவலாய் தெரியவில்லை அல்லது தெரிந்தாதாய் காட்டிக்கொள்ள பலரும் விரும்பவில்லை என்பதே இப்போதைய நிலைமை என்று எண்ணுகிறேன்.

     என்னப்பன் எங்கள் மூவரையும் சிரமப்பட்டு வளர்த்ததாய் எங்களுக்கு நினைவே இல்லை! அவர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி கடனாளியாய் ஆனார் என்பது உண்மை!! அந்த கடனை அடைக்க வெளிநாடு வந்து - அதை முழு(மன)தாய் செய்துவிட்டு, இப்போது என்-மகள் மற்றும் என்னவளுக்காய் பொருளீட்ட இப்போது இங்கிருக்கிறேன் என்று பலமுறை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முக்கியமாய், என்-மகளை பிரிந்திருப்பது பெருத்த வேதனை தான். ஆனால், என் மகளுக்கு 3 வயது இருக்கும்போதே நான் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறேன்; என்னப்பன் போல் கடனாளியாய் ஆகக்கூடாது என்பதில் மட்டுமல்ல; என்-குழந்தைகளுக்கு எந்த கடன்-சுமையும் கொடுக்கக்கூடாது என்பதிலும் மிகத்தெளிவாய் இருக்கிறேன்; அதற்காய் கடினமாய் உழைக்கிறேன். இதையனைத்தையும் தாண்டி - என்னப்பன் எங்கள் மூவருக்கும் நிலம் கொடுத்திருக்கிறார்; என் தமையனுக்கு வீடும் கொடுத்திருக்கிறார். அவர் சிறிது சிறிதாய் சேர்த்தது! எனக்கு நிலம் கொடுத்தது மட்டுமல்லாது - என் நிலத்தில் - 20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய-பலன் தரும் மரங்களை வளர்த்துள்ளார். இப்போது நாம் செய்யும் தவறு - உடனடியாய் எல்லா சொத்துக்களும் வேண்டும் என்று நினைப்பது! அதுதான் ஓர் குழந்தை போதும் என்ற பொருளாதார-நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது!! என்னப்பன் 3 பிள்ளைகள் பெற்று - எங்களை தாராளமாய் வளர்த்து - இத்தனை சொத்துக்கள் கொடுத்தார் என்றால்; நான் 2 பிள்ளைகளாவது பெற்று அதையே செய்திடுதல் வேண்டாமா?

      வாழ்க்கையை நாம் தொடர்ந்து "ஊக்கமாய்" நடத்திட பொருளாதாரம் மாதிரியான சிக்கல்கள் வேண்டும்! ஒர்குழந்தை மட்டும் இருந்துவிட்டால்; பெற்றவர்கள் நாமும் ஓர் உந்துதல் இல்லாமல், இயந்திரமாய் வாழ்க்கையை வாழ்ந்திடுதல் வேண்டும். என்னுடைய பிரச்சனைகள் தான் என்னை இவ்வலைப்பதிவை ஆரம்பித்திட வைத்தது - தொடர்ந்து எழுதிடவும் செய்கிறது! இது ஒருசிலரையாவது சென்றடைகிறது அல்லவா? இதைவிட, எந்த சொத்து பெரிதாய் ஆகிவிடும்?? மேலும், பெற்றோர்கள் இயந்திரம்-போல் இருக்கும்போது - அந்த ஒர்குழந்தையும் எதிலும் பற்றற்று/ மற்றவர்களுக்கு உரித்தான அங்கீகாரத்தை கொடுக்காது "பகிர்தல்" என்றால் என்னவென்றே தெரியாது வளரும்; ஏனெனில், அவர்களுக்கு எல்லாமும் கிடைத்துவிடும். அவர்களுக்கு தங்கள் மனைவி/ கணவனிடம் கூட பகிர்தலை செய்யத்தெரியாது; பின், எல்லா சொத்துக்களும் இருந்தும் அவர்கள் வாழ்க்கை(யும்) பற்றற்று கடந்திடும்!! பிரச்சனையே வேண்டாம் என்றால் - திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது!!! இதுபோல், பலதும் சொல்லிக்கொண்டே போகலாம் - ஆனால், அது இத்தலையங்கத்தின் நோக்கமல்ல! இவையனைத்தையும் தாண்டி, அந்த ஒரேயொரு குழந்தை ஏதவாது ஓர் சூழலில் - இறந்துவிட்டால், என்ன செய்ய முடியும்? எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்று வாதிக்கவில்லை! அதேநேரம், எல்லோரும் உயிர்த்திருப்பர் என்றும் உறுதியாய் கூறமுடியாது அல்லவா? எனவே, விஞ்ஞானம் அல்லது மெய்ஞானம் என்று எப்படி பார்த்திடினும்…

ஒரேயொரு குழந்தை எனும் முடிவு மிகவும் தவறானது!!!

பின்குறிப்பு: "என்-மகள்" தனியாய் இருப்பதில்/வளர்வதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை! என்னவளிடமும் அதை தெளிவுபட கூறியிருக்கிறேன்!! அவள் இப்போதைக்கு அந்த எண்ணமில்லை என்று கூறியிருக்கிறாள்; இத்தலையங்கத்தை என்னவளிடம் வைக்கும் ஓர் பொதுக்கோரிக்கையாய் கூட கருதலாம்!!! இத்தலையங்கம், ஒரேயொரு பெற்றோரை மறு-பரிசீலனிக்க வைத்து - அதனால், "ஒரேயொரு உயிர்" பிறந்திடும் எனின்; அது கண்டிப்பாய் எனக்கு பெருத்த மகிழ்ச்சியே!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக