ஞாயிறு, நவம்பர் 25, 2012

உலகம் அழியப்போகிறதா(மே)???!!!



      சமீபத்திய தகவலின் படி, உலகம் "2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சிலர் நம்புகின்றனர்; சிலர் நம்புவதில்லை; மற்றும் சிலர் அது பற்றிய எண்ணமே இல்லாது இருக்கின்றனர். பல்வேறு சமூக-வலைதளங்களில் கூட இது குறித்தான விவாதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், உலக-அழிவு பற்றி வெளியான திரைப்படங்களை தொடர்ந்து காண்பித்துக்கொண்டிருக்கின்றன; அதிலும், சில பிரபலமான படங்களை குறுகிய கால இடைவெளியில் மீண்டும்-மீண்டும் காண்பிக்கின்றன. இவ்வாறு பலதரப்பட்ட மக்களும், பலதரப்பட்ட ஊடகங்களும் பல்வேறு விதத்தில் உலக-அழிவு பற்றி செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது - அது குறித்தான என்னுடைய பார்வையை பதிவது அவசியம் என்று உணர்ந்தேன். இன்னமும், உலகம் உண்மையில் அழியப்போகிறதா அல்லது எவ்வாறு அழியப்போகிறது என்பது குறித்தான நம்பகமான தகவல்கள் இல்லை! எப்படி இருக்கமுடியும்? என்னைப்பொறுத்த வரை உலக-அழிவு என்பது கூட மனிதர்களின் மரணம் போல தான்!! மரணத்தைப் போல் உலகம் என்பது கூட ஓர் நாள் அழியக்கூடும், அழியவேண்டும்; இங்கே அழிவில்லாதது என்ற ஒன்று இருப்பதாய் எனக்கு தெரியவில்லை!!! அதிக ஆயுட்காலம் உடையது என்று வேண்டுமானால் இருக்கலாமே தவிற, அழிவில்லாதது என்ற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. எனவே, உலகம் ஓர் நாள் அழியும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை!

         "புலி-வருகிறது" என்ற கதையை போல் இந்த உலக-அழிவு குறித்தான காலக்கெடுவும் தொடர்ந்து குறித்து வரப்பட்டு; பின் வெறும் கதை என்று நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வரப்படுகிறது. திடீரென்று ஓர் நாள் (புலிபோல்) உலக-அழிவு கூட வரலாம்! இந்த உலக அழிவு குறித்து - என்னறிவுக்கு எட்டிய வகையில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே விளக்கலாம் என்று தோன்றுகிறது!! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு - நண்பர் ஒருவரின் வீட்டில் விருந்து முடித்துவிட்டு இது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்; அப்போது - தம் வருமானத்தில் மிகப்-பெரும்பகுதியை சேமிக்கும் ஓர் தம்பதியர் - இந்த உலக அழிவு மட்டும் வெகு-நிச்சயம் என்று தெரிந்துவிட்டால், நாங்கள் சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் "மிக-மகிழ்ச்சியாய்" செலவிட்டுவிட்டு உலக-அழிவை எதிர்கொள்வோம் என்றனர்!!! எனக்கு, பெருத்த-சிரிப்பு வந்தது; ஆயினும், அதை வெளிக்காட்டாது மறைத்துவிட்டேன். இது தான், நம் பிரச்சனை - குறிப்பாய் இந்தியர்கள்! சேமிப்பு வேண்டியது தான்; இல்லையெனவில்லை! ஆயினும், நிகழ்-கால வாழ்க்கையை வாழாது, சேமித்து என்ன பயன்? மரணத்தை ஏற்காததுதான், உலகம்-அழியுமெனின் மகிழ்ச்சியாய் செலவிடவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது!! மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும், எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்; நமக்கு முன்னாள் பிறந்தோரும், நம்முடன் பிறந்தோரும், நமக்கு பின் பிறந்தோரும் இறப்பதை தொடர்ந்து பார்த்துகொண்டு தான் இருக்கிறோம். மரணம் உறுதி என்பது மட்டுமல்ல; எப்போதென்று எவராலும் கணிக்க(வும்)முடியாதது!

         புகழ்-பெற்ற மருத்துவர் கூட உடலின் நிலையை வைத்து மரணத்தை ஓரளவிற்கு கணிக்க-முடியுமே ஒழிய, மரணத்-தேதியை "மிகச்சரியாய்" கணிக்க முடியாது. விபத்தால் இறப்பவரை எப்படி கண்டறிவது! கொலை செய்யப்பட போவதை முன்னரே எப்படி அறிவது!! மரணம் எந்த உருவில் வரும் என்று கூட எவரும் மிக-நிச்சயமாய் கூறமுடியாது. மரணம்-பற்றிய பயம் அனைவருக்கும் உண்டெனினும், மரணம் நிரந்தரமானது என்ற நம்பிக்கை இல்லை! அதனால் தான், வாழ்க்கையை வாழாது எப்போதும் பொன், பொருள், பதவி என்ற ஆசையில் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலக-அழிவு - ஓர் பேரழிவு, எல்லோருக்கும் பொதுவானது என்றறியும் போது பதறுகிறோம்; வாழ்க்கையை வாழ்ந்துவிட துடிக்கிறோம். பலருக்கும் உலக-அழிவிற்கு முன், தாம் அனுபவிக்காததை - அனுபவித்து விட வேண்டும்; இல்லாத தீய-பழக்கத்தை பழகவேண்டும்; அல்லது நிறுத்தி-வைத்திருக்கும் தீய-பழக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் போன்ற எண்ணங்கள் தான் உள்ளன. இந்த நிலையில் கூட, இருப்பதில் ஒரு பகுதியை-யாவது (உலகம் அழியாவிட்டால், பிறகு என்ன செய்வது?) எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு சாகலாம் என்ற "நல்லெண்ணம்" உருவாவதில்லை!! அது ஓர் நாளில் நிகழ்ந்து விடப்போகிறது; நடந்த பின் எதுவும் தெரியப்போவதில்லை; அந்த நிலையிலாவது - "சிறிது நல்லெண்ணங்களையும், நற்செயலல்களையும்" செய்ய பழகலாமே!!! ஒருவேளை, உலகம் அழியவில்லையெனில் - ஓர் புதிய-மனிதனாய் வாழ்வை துவங்கிட அது வழிவகுக்குமே!

     இரண்டு நாட்களுக்கு முன் இது குறித்தான செய்தி ஒன்றை படித்தேன். அதில், "பிரான்ஸ்" நாட்டிலுள்ள "புகாரச்" என்ற கிராமத்தில் உள்ள ஒரு மலை பிளக்குமாம்; அதிலிருந்து வேற்றுக்கிரக விண்கலன் ஒன்று வருமாம் - அதில் ஏறிக்கொள்வோர் மட்டும் உயிர் தப்புவராம் (திரைப்படங்களின் பாதிப்பு போலும்). இதை கேள்விப்பட்டு, அங்கே சென்ற எண்ணற்றவரை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரை இப்போதே அனுப்பிவிட்டனாறாம். அடப்பாவிகளா!!! உலகம் அழியப்போகிறதோ இல்லையோ! ஆனால், இங்கு குவியும் மக்களால், ஓர் பேரழிவு துவக்கப்பட்டுவிடும் போல் தெரிகிறதே!!! மரணம் எப்படி நிகழும் என்பது தெரியாதது போல், உலக-அழிவும் இப்படிக் கூட இப்படித்தான் துவங்குமோ? எப்படியோ, அப்படி ஓர் அழிவு வந்து - உலகம் அழிந்து மீண்டும் பிறக்குமேயானால், நல்லதுதான்! இங்கே, பொய்யர்களும் - கயவர்களும் அதிகமாகி விட்டனர்; மீண்டும், ஓர் மனித இனம் உருவாகினால் நல்லது தான் என்று எண்ணத்தோன்றுகிறது!! கடைசியாய் கொடுக்கப்பட்ட நாளிற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளாதால் - இன்னும் என்னென்ன கதைகள் எல்லாம் கிளம்பப்போகிறதோ? இன்னும், எத்தனை பகுதிகள் இது மாதிரி முற்றுகை இடப்பட போகிறதோ?? என்னென்ன, குற்றங்கள் அதிகரிக்கப்போகிறதோ??? ஒரு முறை "தண்ணி அடித்துப்" பார்க்கலாம் என்பது போல் - பலரும் ஓர் முறை "கொலை செய்து" பார்க்கலாம் என்று துவங்கிவிடுவரோ? அதன்பின், இது மாதிரி நம்முடைய செயல்களே(தான்) உலக-அழிவிற்கு வித்திடுமோ??

           எனக்கு இதில் துளியும் நம்பிக்கையில்லை; சிறிய விசயத்திற்கு கூட பலவாறு யோசிக்கும் நான் - இந்த "உலக-அழிவு" குறித்து எந்த கவலையும் அடையவில்லை! மரணத்திற்கு பின் என்ன என்பதற்கே எனக்கு விடை தெரியவில்லை! மரணம் என்பது "உண்மை; இறுதியானது" என்பது உணர்ந்ததாலே, என்னால் அதற்கு பின் என்ன என்று யோசிக்க முடிந்ததாய் தோன்றுகிறது. எனவே, உலக-அழிவால் என் மரணம் நிகழ்வதைப் பற்றி எனக்கு கவலை(யே) இல்லை; இன்னமும் கூட என் சிந்தனை அதற்கு பிறகு என்ன என்பதாய்-தான் இருக்கிறது. ஒருவேளை, எல்லோரும் தானே இறக்கப்போகிரார்கள் என்பதாலா? என் உறவும், நட்பும், சுற்றமும் எல்லாரும் தான் அழியப்போகிறோம்! பின் எதற்கு கவலை வரவேண்டும்?? நான் இல்லையென்றால், என் மகள் என்ன செய்வாள்? என்ற கேள்வி தான் என்னை வதைக்கமுடியும்! அவளும் இருக்கமாட்டாள் எனும்போது நான் ஏன் கவலை கொள்ளவேண்டும்?  என்று கூட இருக்கலாம். இருப்பினும், எனக்கும் ஓர் ஆசை உள்ளது (நானும் மனிதன் தானே)! அதை என்னவென்று பின்குறிப்பாய் எழுதியிருக்கிறேன். எனக்கு இப்போதிருக்கும் எண்ணமெல்லாம் ஒன்று தான்; கண்டிப்பாய் அழியக்கூடும் என்று நான் நம்புவதால், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டதால் - முன்பை விட, நான் இன்னமும் உண்மையாய் இருக்கவேண்டும் - எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும் என்பதே. நான் இறுதியாய் கூற விரும்புவது எல்லாம்; உலக-அழிவை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்த்து, நாம் நம்முடைய எண்ணங்களை, செயல்களை, மேலும்…

உண்மையானதாய், உயர்வானதாய் ஆக்கிட முயல்வோம்!!!

என்னுடைய ஆசை (பின்குறிப்பு): ஒன்றே-ஒன்றுதான்; அது, இந்த உலகம் அழியும்போது நான் என்மகளுடன் இருக்கவேண்டும் என்பதே! மூன்று வயதானவளுக்கு மரணம் என்பது என்னவென்று தெரியாவிட்டாலும், அந்த அழிவு நடக்கும்போது பயம் எழும்!! அந்த சமயம் கண்டிப்பாய் "அப்பா" என்று அழைப்பாள்!!! அப்படி அழைக்கும்போது அவளுடன் இருந்து "நானிருக்கிறேன் மகளே! என்று கூறி - அவளை என்நெஞ்சோடு அனைத்து, அவளுக்கு அத்தனை தைரியத்தையும் கொடுத்து - இருவரும் ஒருசேர உயிர் துறக்கவேண்டும்!!!" இப்போது 'நாளை உலகம் இல்லை என்றானால்…" என்ற  பாடலை கேளுங்கள்; அந்த பாடல், ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்!                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக