ஞாயிறு, நவம்பர் 04, 2012

என்ன விதமான அரசியல் இது???




        சமீபத்தில், தமிழக-எதிர்க்கட்சி தலைவர் "நிருபர்களை தரக்குறைவாய்" பேசியதாய் வெளிவந்த செய்திகள் குறித்து அனைவரும் படித்திருப்பீர்கள்! அவரின் பேச்சை (மட்டும்) பத்திரிக்கைகள் பரவலாய் திரித்து "பரபரப்பான" செய்திகளை வெளியிட்டிருப்பினும், அந்த தலைவர் பேசியது எந்த விசயத்திலும் நியாயமானது அல்ல. நானும், இயன்ற அளவில் அது சம்பந்தமான "வீடியோ" ஆதாரங்களை பலமுறை பார்த்தேன்! அதைப் பார்த்த பின் - அது பற்றி வெகுவாய் யோசிக்க ஆரம்பித்தேன்; அதன் பின் இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள - சில நியாயங்களை விளக்குவது என்னுடைய கடைமையாய் உணர்ந்தேன். இது எவரையும் ஆதரித்து பேசவோ அல்லது தூற்றவோ எடுத்திருக்கும் முயற்சி அல்ல; ஏனெனில், அரசியல் என்பது எப்போதும் "பொதுமக்களுக்கு" நிரந்தரமான ஒன்றாய் இருக்க முடியாது! அப்படி இருப்பின், பலவேறு கட்சிகள் தேவைப்படாது! அவர்கள், எல்லோரிடமும் உள்ள நடுநிலையை எடை போடுகிறார்கள். அதனால் தான், அவர்கள் "பெரும்பாலான தேர்தலின்" போது "மாற்று ஆட்சியை" தேர்ந்தெடுக்கிறார்கள். நானும், பொதுமக்களில் ஒருவன் என்பதால் - அந்த நடுநிலையுடனே இந்த தலையங்கத்தை அணுகியுள்ளேன். இதே போன்று, வேறொரு நிகழ்ச்சியும் நடந்து - ஓர் பிரதான கட்சியின் தலைவர் கொடுத்துள்ள அறிக்கையும் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது! இது போல், அவர் அடிக்கடி செய்வது தான் எனினும் -  மேற்கூறிய நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு பார்த்தவுடன் என்னுள் எழுந்த கேள்வி தான் "என்ன விதமான அரசியல் இது???".

      முதல் நிகழ்ச்சியில் - எதிர்க்கட்சி தலைவர் "நாய்" என்று நிருபரை திட்டியிருப்பது தெளிவாய் விளங்கி இருக்கிறது. இது அவரின் "அரசியல்-முதிர்ச்சியின்மையை" காட்டுவதாய் பலரும் விமர்சிக்கின்றனர்; எனக்கும், அவர் மீதிருந்த நம்பிக்கையும் - மரியாதையையும் குறைந்து, அவ்வாறே எண்ணிட தோன்றிற்று! அவர் தன்னிலை தவறாது - அந்த சூழ்நிலையை சமாளித்திருக்க வேண்டும்!! அவர் மீது தவறிருக்கிறது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நாம் இங்கே இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்!!! எல்லா செய்தியிலும் (அல்லது "வீடியோ" ஆதாரத்திலும்), நிருபர்கள் கேட்ட கேள்விகள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன! அவைகளையும் - சம்பத்தப்பட்ட ஊடகங்கள் தெளிவாய் வெளியிட்டிருக்கவேண்டும். அந்த அரசியல்கட்சி தலைவர் "சிறிது, சிறிதாய்" தன் கோபத்தை உயர்த்தி இறுதியில் அவ்வாறு திட்டியது தெள்ளத்தெளிவாய் தெரிகிறது! ஏன், அந்த கேள்விகள் "தெளிவாய்" நமக்கு கேட்கவில்லை?? அந்த கேள்விகளில் - அவரை "வேண்டுமென்றே" கோபப்படுத்தும் நோக்கம் இருந்ததா??? இது மாதிரி, பல நிருபர்கள் "எல்லை-மீறி" பல கேள்விகளை, பலரிடம்-பலத்தருனங்களில் கேட்கின்றனர் என்பது பலருக்கும் தெரியும். "கற்பு" பற்றி பேசி சர்ச்சைக்குள்ளான "நடிகை" விசயத்தில் கூட, எவரும் "ஏன் அந்த நிருபர் அப்படியொரு கேள்வியை கேட்டார்" என்று எவரும் யோசிக்கவில்லை என்பதை அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறேன். அரசியலிலுள்ள தம்-பெரும்பங்கை, தமது கடமையை "உணர்ந்து" ஊடகங்கள் செயல்பட வேண்டும்!!!

      எனவே, ஏன் அந்த தலைவரை கோபப்படுத்தும் விதமாய் கேள்விகள் கேட்கப்பட்டன என்பதை ஆராய வேண்டும்! இச்சம்பவத்தின் போது அந்த தலைவர் "ஆளும் கட்சி தலைவியை, சென்று கேள்" என்று மீண்டும், மீண்டும் கோபமாய் கேட்டிருக்கிறார்!! "இச்சம்பவத்தின்" பின்னணியில் தொடர்புள்ளபோது - அந்த தலைவியை ஏன் அவர்கள் கேள்வி கேட்கவில்லை??? அப்புறம் என்ன, "பத்திரிகை தர்மம்"? இதை சார்ந்து பதியப்பட்ட ஓர் வழக்கிற்காய் - அவசரப்பட்டு ஏன் அந்த தலைவர் "முன்-ஜாமீன்" எடுத்தார் என்பது எனக்கு புரியவில்லை! எதிர்க்கட்சி தலைவராய் இருந்தும் ஏன் அவருக்கு அதை சமாளிக்கும் திறன் இல்லாமல் போனது? அல்லது ஏன் பயந்தார்?? இதை, ஓர் நல்ல பாடமாய் எடுத்துக்கொண்டு அவரின் "பொறுப்பு மற்றும் கடமை"-யை அவர் உணர்ந்திடுதல் வேண்டும்! இச்சம்பவம் முடிந்தபின் கூடிய "சட்டமன்ற" கூட்டத்தில் எதிர்க்கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ ஒருவர் "அஞ்சாநெஞ்சம் கொண்ட தலைவர்" என்ற அடைமொழியுடன் ஏதோ-கேள்வியை முடிக்கும் முன்னரே, "ஆளும்கட்சி தலைவி" இடைமறித்து "அஞ்சாநெஞ்சன் என்றால், ஏன் முன்-ஜாமீன் வாங்கினார்" என்று கேட்டாராம்! இந்த செய்திகளை படிக்கும் போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை? முதலில், "அஞ்சாநெஞ்சன்" என்ற அடைமொழி ஏன் "அவைக்கூட்டத்தின்"போது வந்தது? இதுவே, அபத்தம் எனில், அதை இடைமறித்து "கிண்டல்" செய்த ஆளும்-கட்சி தலைவியின் செயலை என்ன சொல்வது?? இங்கே, அடிப்படையில் ஏதோ தவறிருப்பதாய் உணர ஆரம்பித்தேன்.

       இவ்விரண்டு கட்சிகளும் - இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது - "முன்னாள் ஆளும் கட்சியின்" தலைவர் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தார் பற்றியும் ஓர் வார-இதழ் "ஏதோ, உண்மையை" எழுதி விட்டதென்பதற்காய், அதற்கு ஏதும் பதில் கூறாமல், என் மனைவியும், மகளும் "பார்ப்பன-சாதி"-யில் பிறந்திருந்தால் அப்படி கேள்வி "எழுப்புவார்களா" என்று மறு-கேள்வி கேட்கிறார்! இதைப் படித்தவுடன் - உண்மையில் நான் கூனிக்குறுகி போனேன்!! எந்த விதத்தில் இந்த கேள்வி நியாயமாகும்? அதுவும், "பகுத்தறிவு-வாதி" என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஓர் "பழுத்த-அரசியவாதி" இதை கேட்கிறார்! அவர் போன்று பலரின் இந்த ஓர்-சாதியை குறிப்பிட்ட சாடலை முன்பே என் தலையங்கம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இது தரம்-தாழ்ந்த கேள்வி அல்லவா? இது மாதிரி, "சாதியை" வைத்து அரசியல் நடத்தும் பல அரசியல் கட்சிகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும்! பெரும்பாலும், அவைகள் அந்தந்த சாதிகளை ஆதரிப்பதாய் தான் காட்டிக்கொள்ளும்! ஆனால், இம்மாதிரி "ஓர்-குறிப்பிட்ட" சாதியை சாடுவதற்கல்ல!! என்றோ, உயர்-சாதி எனும் எண்ணத்தில் எவரோ செய்த கொடுமைகளுக்காய் - இன்னமும் அந்த சமூகத்தை அப்படியே பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அதுவும், "பாரம்பரியம்-மிக்க" ஓர் அரசியல் கட்சியின் தலைவர் அவ்வாறு கூறுகிறார்! இதுவும், நான் அடிக்கடி குறிப்பிடும் "என்றோ, நடந்த ஆணாதிக்க" கொடுமைகளுக்காய் - இப்போதிருக்கும் ஆணினம், தண்டனையை அனுபவிப்பது போல் தான்!

         மேற்குறிப்பிட்ட மூன்று கட்சிகளும் தான் - மாறி-மாறி (அல்லது கூட்டணியுடன்) ஆட்சிக்கு வரும் நிலை; குறைந்தது இன்றைய சூழலில்!! ஆனால், இவர்கள் "எத்தனை தரமற்ற அரசியல்" செய்கிறார்கள் என்பதை மேலே கோடிட்டு காண்பித்துள்ளேன்!!! இவர்கள் மூவரும், ஒருவரை ஒருவர் தனியாகவோ, இன்னொருவருடன் கூட்டு-சேர்ந்தோ "தனி-நபர் சாடலை" தான் செய்கின்றனர். இல்லையெனில், சாதி-மதம் போன்ற "இரண்டாம்-தர" காரணிகள்! கடைமையை, இருக்கும் பிரச்சனைகளை மறந்த (குறிப்பாய், மின்சாரம்) அவர்களின் செயலை எவர் உணர்த்துவது? அடுத்த 3 ஆண்டுகளுக்கான மின்-திட்டமொன்றை முதல்வர் கூறியவுடன், "இது சாத்தியமல்ல" என்று துளியும் சிந்திக்காது - மறுத்திடும் "(அடிக்கடி, கூட்டணி மாற்றும்)ஓர் சாதிக்கட்சி தலைவர்". மறுபுறம், முன்னால்-முதல்வர் "மின்-திட்டத்தில்" பெரும்பகுதி தாங்கள் செய்தது என்கிறார்; எவரெவர் எதை செய்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் எப்படி போகும்? எவர் மக்களிடம் பொய்-கூறி ஏமாற்றப் பார்க்கின்றனர்? மின்சாரப்-பிரச்னைக்கு அனைத்து-கட்சிகளும் ஒன்றுபட்டு ஓர் தீர்வை அடைந்திட பாடுபடவேன்டாமா?? இதில் என்ன, எவரின் பங்களிப்பு அதிகம் என்ற போட்டி??? இதைப்பார்க்கும் போது முன்பொரு தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் நமக்கு இயல்பாய் பாராட்டும்-குணம் இல்லாதது தான் காரணமோ என்று என்னிட தோன்றுகிறது!  இன்னமும் கூட "தமிழின் சிறப்பாய்" பண்டை-இலக்கியங்களையே கூறிக்கொண்டிருக்கும் செயல் போல், "சிறந்த அரசியல்வாதியாய்"…

இறந்துபோனவர்களை அடையாளம் காண்பிக்க வேண்டுமா???

பின்குறிப்பு: இத்தலையங்கத்தை "இறுதி-சரிபார்க்கும்"போது நாளிதழில் படித்த செய்தி - "ஆந்திர மாநில" அமைச்சர் ஒருவர் "அரசாங்க பணத்தை" கையாண்டு தன்-மகளின் "திருமண மேடைக்கு" மட்டும் 1 கோடி உரூபாய் செலவிட்டாராம். மனது மிகவும் வலித்து-கனத்து விட்டது!  அளவுக்கு அதிகமாய்(கூட) சொத்து சேருங்கள்!! அதில் ஒரு பகுதியையாவது "மக்களுக்காய்" கொடுத்துவிட்டு பின் சேருங்கள்!!! நிலையில்லாத இந்த வாழ்க்கையில் - (பதவி)இருக்கும்போதே ஏதேனும் செய்திட வேண்டாமா - என்ன விதமான அரசியல் இது???                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக