ஞாயிறு, அக்டோபர் 07, 2012

மறந்துவிடாதே, என்-அம்மா!!!...



கருவுக்கு - உயிர் மட்டுமல்ல;
உருவும் கொடுத்து - என்னை
உருவாக்கிட எத்தனை வலிகளை;
உள்வாங்கியிருப்பாய் என் அம்மா!

சிறுவயதில் நான்கொடுத்த - எல்லா
சிரமங்களையும்; பொறுத்தருளிய என்தாயே!
உனக்கு தெரியாத சிறுசெயல்களில்(கூட);
உன்னை அரவனைக்கவில்லையே என்-அம்மா!!

ஏணியாய் - இந்தஉயரத்திற்கு என்னை;
ஏற்றிவிட்ட - உன்னை, "கேவலம்"
"எஸ்கலேடர்" ஏறத்தெரியாத காரணத்திற்காய்;
எதற்காய், கடிந்தேன் என்னம்மா?

காற்றிலசையும் கதவிடுக்கில்; சிக்கிடாத,
கலையை - கனிவாய் கற்றுக்கொடுத்தவளே!
தானியங்கும் "மெட்ரோ-வாயிலில்" நுழையத்தயங்கிய
"தாயுன்னை" - திட்டிவிட்டேனே எந்தெய்வமே!

விரல்சேர்த்து உணவை, பொருளை;
விருட்டென்று எடுக்க - பயிற்றுவித்தவளே!
"போர்க்-நைப்" வைத்து நாசுக்காய்;
"பிஸ்ஸா"வை, சாப்பிடவில்லையென நொந்தேனே?

வெந்ததென தெரிந்தும் - உணவை;
விரலால் நசுக்கி ஊட்டினாயே!
"அரை-வேக்காட்டு" மாமிசத்தை - நாகரீகமென;
அறிந்தே உண்ண-உன்னை வற்புருத்தினேனே!

இதுபோல் எத்தனை, எத்தனை;
இழிவாய் உன்னை-நடத்திட்ட தருணங்கள்?
இதற்காகவா, அனைத்தையும் தாங்கினோம்-என;
இக்கயவனை சபித்திருப்பாயோ? என்னுயிரே!

ஏனம்மா? ஏதுமறியாத சிசுவெனக்கு;
எல்லாம் கற்றுத்தந்த, உனக்கு -
எதுவும் கற்றுத்தர மறந்தேன்?
என்னையே-நான் வெறுக்கிறேன் அம்மா!

ஆழயோசித்ததில் எனக்கு ஒன்று-புரிந்ததம்மா!
அம்மாவாய்(மட்டும்) உன்னை பார்த்திராது;
"என்-மகளாய்(உம்)" உன்னை பார்த்திருப்பின்;
எல்லாம்-பொறுத்து கற்றுத்தந்து இருப்பேனம்மா!

மனதில்-சிறிதும் வருத்தமின்றி - என்னை;
மன்னித்துவிடுவாய் என்பது தெரியுமம்மா!
மறந்தும்; இந்த-இழி செயல்களுக்காய்
"மறந்துவிடாதே", என் அம்மா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக