ஞாயிறு, அக்டோபர் 14, 2012

கற்பழிப்புக்கு காரணம், பெண்களின் திருமண வயதா???



   கடந்த மாதத்தில் மட்டும் "ஹரியானா" மாநிலத்தில் நடந்த 19-க்கும் மேலான கற்பழிப்பு வழக்குகளையும் - அதை தொடர்ந்த செய்திகளையும் பலரும் படித்திருக்கக் கூடும். இதற்கான காரணங்களாய் கூறப்படும் விசயங்களில் "பெண்களின் எண்ணிக்கை குறைவு" என்பதும் ஒன்று. அதன் விளைவாய் திருமணத்திற்கு பெண்கள் கிடைக்கவில்லை எனவும் - அதனாலேயே பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால், பெண்களின் திருமண வயது வரம்பை 18-லிருந்து 15-ஆக குறைக்கவேண்டும் என்று தொடர்-போராட்டங்கள் நடைபெறுகிறது. அதிலும் சிலர், வரலாற்றை காரணம் காட்டி "முகலாய அட்டூழியங்களை" தவிர்க்க பால்ய-விவாகங்கள் நடந்தது போல், இப்போதும் நடக்கவேண்டும் என்றும் கூறுகின்றனறாம். இது குறித்து, அங்கிருக்கும் "பஞ்சாயத்து" சங்கம் ஒரு முடிவுக்கு வரப்போவதாயும் செய்திகள் வருகின்றன. இதனிடையில், அம்மாநில கட்சியின் தலைவர் "பெண்கள் விரும்புவாதாலேயே, கற்பழிப்புகள் நடக்கின்றன" என்றும் கூறி உள்ளார். இப்படி, பலவேறு காரணங்கள் பலவேறு தரப்பில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் - இது குறித்தான என்னுடைய பார்வையை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியது. இவர்கள் கூறும் காரணங்களை விடுத்து, கற்பு எனும் விசயத்தை அலசுவது மிகமுக்கியம் என்று படுகிறது. கற்பு எனும் "வேலியை" முதலில் உடைத்தெறிய வேண்டும் என்று தோன்றுகிறது. இது எளிதல்ல - எனின், "வன்முறை" மூலாமவது உணர்த்தப்படவேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.  

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் (அல்லது பெரும்பான்மையோனோர்) தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது உண்மை எனில், இதை மிகுந்த ஆழமாய் ஆராயவேண்டும்; இதை எக்காரணம் கொண்டும் தொடர விடக்கூடாது. இன்னுமா, இந்த சாதியக்-கொடுமைகள் நடக்கின்றன? இந்த மனம்-சார்ந்த வளர்ச்சி அடையாமல் எத்தனை தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி நடந்து என்ன பயன்? அதே மாநிலத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஓர் ஆண் - உயர்சாதி பெண்ணை காதலித்தாலே கொன்று விடுவார்களாம்! இது என்ன(டா) நியாயம்?? அந்த சாதியின் "பாதுகாப்பு அரண்" என்று முழக்கமிடும் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? தமிழகத்தில் இருக்கும் அந்த சாதியின் கட்சி ஒன்று சமீபத்தில் "இலங்கை-அதிபர்" வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தது! இங்கே, சக-இந்தியர்கள் இக்கொடுமைக்கு ஆட்படும்போது நீங்கள் முதல் ஆளாக நின்று போராட வேண்டாமா? அவர்களுக்கு பாதுகாப்பாய் அரசியல்-கட்சியை சார்ந்தவர்கள் இந்நேரம் அங்கு சென்றிருக்க வேண்டாமா?? சட்ட-ரீதியாய் அவர்களை தண்டிக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்??? இத்தனை சட்டங்களை "அம்பேத்கர்" போன்றவர்கள் பெற்றுத்தந்து என்ன பயன்? குறைந்தது, அம்மக்களின் பெயரால் - அம்மக்களுக்காய் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் கூட இதை செய்யாது போனதை என்னென்று சொல்வது?? இப்படிப்பட்ட நேரத்தில் தான் அக்கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை உணர்த்திடுதல் வேண்டும்.

       கற்பழிக்கப்பெடும் பெண் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்றாலும், தடுக்கப்பட வேண்டும்! அதிலும் இந்த மாதிரி ஓர் குறிப்பிட்ட சமூகத்தை மைய்யபடுத்தி நடக்கும்போது - தேவையெனில் "அடக்குமுறையை"யும் கையாளவேண்டும்!! "கருவை தாங்குபவள்" பெண் என்ற "ஒரே காரணத்தால்" - கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்பதை நியமித்தவன் எவன்? என்னவிதமான, சமூக-நியதி இது?? அதிலும், சூழ்நிலை காரணத்தால் - தன் தவறேதுமின்றி கொடுமைக்குள்ளாகும் இம்மாதிரி பெண்களை - "சமூகம்" என்ற போர்வையில் எவர் காயப்படுத்தினாலும் கடுமையாய் தண்டிக்கவேண்டும்! எந்த சந்தேகமும் இல்லாமால் - இதை அதிகம் சுட்டிக்காட்டி காயப்படுத்துபவர்கள் பெண்களே என்ற உண்மையை கவிதை ஒன்றில் முன்பே வெளியிட்டு இருக்கிறேன். உண்மையில், ஓர் பெண்ணாய் - சில வருடங்களுக்கு முன் - தமிழ்-நடிகை ஒருவர் கற்பு குறித்த "முற்போக்கு சிந்தனை" கொண்ட கருத்தை நாம் "அங்கீகரிக்க" தவறி விட்டோம்; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் அவரின் கருத்தை வழி-மொழிந்து கொண்டே வருகிறேன். உடை துவங்கி பலவேறு விசயங்களில் நாம் பாரம்பரியத்தை விட்டு மாறியது(கூட) முக்கியமில்லை; இது மாதிரியான சிந்தனைகளில் இருந்து மாறுபடவேண்டும். இந்த போலி-சமுதாயத்திற்கு பயந்து (கற்பென்பது மாயை என்பதையுணராது) கற்பழிக்கப்பட்ட பல பெண்கள் "தற்கொலை" செய்துகொள்கிறார்கள்! உண்மையில், அவர்களுக்கு கற்பழிப்பு-எனும் கொடுமையை விட இந்த சமூகக்-கொடுமைகள் தான் அதிவலியை கொடுப்பதை தெரிகிறது.

      கற்பு என்பது ஒவ்வொரு பெண்ணின் சுதந்திர-எண்ணமாய், அது குறித்து அவளே முடிவு செய்பவளாய் இருக்கவேண்டும்; இது சாத்தியமாயின் - ஓர் பெண் "ஆணை கற்பழிக்க" தயங்க(வே) மாட்டாள். ஒவ்வொரு வன்முறையும் "பொறுமையின் எல்லையில்" தான் துவங்குகிறது; ஓர் பெண் மட்டும் கற்பு-ரீதியான இந்த அடக்குமுறையில், பொறுமையின் எல்லையை அடைந்துவிடின், "ஆண் கற்பழிக்கப்படுவது" கண்டிப்பாய் நடக்கும். பெண்கள் மட்டும் அதை செய்ய ஆரம்பித்தால் - அது மிகக்கொடூரமாய் இருக்கும்! அவளால், அதை எளிதாயும் செய்யமுடியும்!! எனவே, கற்பு குறித்தான பார்வையில் பெரும் மாற்றம் வேண்டும்!!! இதுவெல்லாம், ஆண்களாலே வகுக்கப்பட்டது; கற்பழிப்பில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மட்டும் "வயிறு-வீங்கும்" என்பது "இயற்கை/ இறைவன்" நிர்ணயித்தது. திருமணம் என்ற போர்வையில் அதே "வயிறு-வீங்கும்" விசயம் அங்கீகரிக்கப்பட்டே நடக்கிறது; ஆனால், ஓர் விபத்தாய் - தன் விருப்பின்றி நடக்கும் போது மட்டும் அதே காரணத்திற்காய் பெண் தண்டிக்கப்படுவது - எந்த விதத்தில் நியாயம்? ஏன், கற்பழிப்பு என்பது பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கம் சார்ந்த விசயமாய் கற்பிக்கப்பட்டது?? இந்த தடையை முதலில் தகர்த்தெறிய வேண்டும்! அதற்கு, மிகப்பெரிய ஒற்றுமை "பெண்களிடத்தில்" வேண்டும்!! அவர்கள் முதலில் மனதளவில் இந்த கற்பு எனும் "சிறையில்" இருந்து வெளிவர தயாராகவேண்டும்! "தாயாராவது" தன் தனித்தன்மை என்ற "பொய்-கர்வம்" தவிர்த்து - இயற்கை/ இறைவனின் படைப்பு அது என்பதை உணரவேண்டும்.

   இந்த கற்பு எனும் விசயத்தில் மேற்கூறிய தெளிவு வந்துவிடின், திருமணம் எனும் உறவின் உண்மையான அர்த்தம் விளங்கும். "பெண்-சுகத்தை அனுபவிப்பதற்கு மட்டுமே திருமணம்" என்ற தவறான எண்ணம் விலகும்! பெண் என்பவள் குழந்தை-பெரும் கருவி என்ற நினைப்பு மாறும்!!! பெண் என்பவள், உடல்-சுகத்திற்கு மட்டும் என்ற "தவறான உணர்தலால்" தான் அல்லது அது மட்டும் முன்னிருத்தப்பட்டிருக்கும் காரணத்தினால் தான் - எண்ணிக்கை குறைவென்பதால், திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை, என்ற காரணம் காட்டி - பெண்ணை கற்பழிக்கிறான். இல்லை எனில், அந்த பெண்ணை - திருமணம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்திருப்பான்; இவ்வாறு கூட்டாய் (???!!!) சேர்ந்து பெண்ணை கற்பழிக்கும் கொடுமைகள் மறையும்! கற்பழித்துவிட்டால் மட்டும் ஓர் பெண் "மனைவியாய்" ஆகிவிடுவாளா? இல்லை, கற்பழித்துவிட்டால் திருமணம் நடந்து விட்டதாய் "உணர்வு" வந்துவிடுமா?? இதே நிகழ்வு, திருமணமான பின்பும் பொருந்தும்! திருமணம் நடந்துவிட்டதால் மட்டும் - ஓர் பெண் (அல்லது ஆண்) எப்போதும் உடலுறவுக்கு இணங்கவேண்டும் என்பதும் தவறான அணுகுமுறை!! எனவே, திருமணம் என்பது என்னவென்பதை உணரும் வரை - கற்பழிப்புக்கு காரணம் பெண்களின் எண்ணிக்கை என்பதிலோ அல்லது திருமண வயது என்பதிலோ எந்த அர்த்தமோ/ உண்மையோ இல்லை. மேலும், இந்த கற்பழிப்பு காரணமாய், திருமண வயதை குறைத்தால் - கண்டிப்பாய் அது…

மென்மேலும், பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்!!!                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக