ஞாயிறு, அக்டோபர் 21, 2012

"தமிழ்(தனி)-ஈழம்" கனவு, இனியும் வேண்டுமா???


(விரக்தியின் எல்லையை அடைந்தவனின் பார்வை!!!)

     "தமிழ் ஈழம்", "தனி ஈழம்" என்ற கனவும்; போராட்டமும் மெல்ல, மெல்ல நீர்த்து வரும் இந்த வேளையில் - அது குறித்து ஒரு பார்வையை - விரக்தியின் எல்லையை அடைந்தவனின் நிலையிலிருந்து விளக்கியிருக்கிறேன். இது பலரின் எதிர்ப்புக்கு ஆட்படக்கூடும்; ஆயினும், இது பற்றி என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஊடகங்களும், அரசியல்வாதிகளும் - தங்களின் பொதுவாழ்வை மறந்து - தங்களின் பணியை ஓர் வியாபாரமாய் பார்ப்பதால் இது குறித்த உண்மையை, மறைத்து வேறுவிதமான தகவல்களை கொடுக்கலாம்; கொடுத்து, இதில் சம்பந்தப்பட்டவர்களை இன்னமும் உணர்ச்சிவயப்டச் செய்து நாட்களை கடத்தலாம். ஆனால், நான் "தமிழ்/தனி ஈழம்" என்பதை ஓர் சராசரி மனிதனாய் நின்று பார்க்கிறேன்; அது தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. நேரடியாய், இன்னமும் "தமிழ்/தனி ஈழம்" எனும் கனவு வேண்டுமா? என்ற கேள்வி எழின்; துளியும் தாமதிக்காது "வேண்டாம்" என்று என்னால் கூற இயலும். அதற்கு, எனக்கு தெரிந்த நியாயமான காரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். இது, இனியும் இந்த இன்னல்கள் தொடர்ந்திட வேண்டாம் என்ற எண்ணத்தில் எழுந்தது! ஈழம் என்பது நம் தமிழர்களின் நிலம் என்பதற்கு எத்தனை ஆதாரம் இருப்பினும், அதை எல்லாம் தாண்டி இந்த எண்ணம் எழ காரணம் - இனியும், இது தொடர்ந்திடின் என்ன செய்வது என்ற பயம்!! இதை பலரும் யோசித்து எப்படி வெளியில் சொல்வது என்று தயங்கி இருக்கக்கூடும். நானே பல நாட்கள் என்னுள்ளேயே நிகழ்ந்த விவாதங்களுக்கு பின்னே இதை எழுதுகிறேன்.

       முதலில், பிரபாகரன் எனும் அந்த "மாவீரன்" இல்லாதது தான் இவ்வாறு யோசித்திட வைத்தது! அவரைப்பற்றி இன்னமும் கூட எதிர்மறை விவாதங்கள் இருக்கக்கூடும்!! ஏன், இந்தியாவில் நடத்திட்ட ஓர் "அரசியல்-கொலை"யை மட்டும் கொண்டு (தங்கள் தவறை ஒப்புக்கொண்ட பின்னும்) அவரை தூற்றுவோர் பலருண்டு!!! எவர், எப்படி கூறிடினும் - அவர் மாவீரன் என்பதை எவரும் மறுத்திடுதல் இயலாது; தன் குடும்பத்தை கடந்து, ஓர் சமுதாயத்திர்க்காய், தன் இனத்திற்காய் தன்னை முழுதாய் அர்ப்பணித்தல் என்பது எளிதான விசயமன்று! அவர் இறந்து (இறப்பு குறித்தே இன்னமும் விவாதங்கள் இருப்பினும்) 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவர் மீண்டும் ஓர்முறை மீண்டெழுவார் என்ற நம்பிக்கை முற்றிலும் தகர்ந்துவிட்டது. அவருக்கு மாற்றாய் இனி எவரும் வரப்போவதில்லை! அப்படியே வந்திடினும் இது விளையாட்டல்ல; "விட்ட இடத்திலிருந்து" துவங்கிட; மீண்டும் முதலில் இருந்து துவங்கவேண்டும்!!! அது அத்தனை எளிதல்ல; அதற்கு இன்னமும் பல ஆண்டுகள்-போராட்டம் தேவைப்படும்! அதற்கு மீண்டும் ஓர்முறை - இதுவரை இழந்திட்ட அனைத்தையும் (மீண்டும்)இழக்க நேரிடும்! அது இப்போதைய இழப்பைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமாய் இருக்கும்!! சரி, அத்தனையும் நடந்து - இதே நிலை வந்து; "மேலே" காண்பிக்கப்பட்டிருக்கும் படத்தைப் போல் "மனிதனும், மனிதமும் - இல்லாத, வெறும் கட்டடம்" மட்டும் உள்ள சூழ்நிலை ஏற்படின்??? அதற்காகவா, இத்தனை போராட்டங்களும் "வீர-மரணங்களும்"? இதை இப்போதேனும் - உணர்ந்திட வேண்டாமா?

   சரி, ஒருவேளை - மீண்டும் ஒருவர் வந்து "தமிழ்/தனி ஈழமும்" பெற்றுவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம்! அதன் பிறகு, என்ன நடக்கும் என்பதை கீழ்க்காணுமாறு விளக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றதால் "பாகிஸ்தான்" எனும் நம் தொப்பூழ்கொடி-நாட்டுடன் எத்தனை எல்லைப்பிரச்சனைகள் இன்னமும் தொடர்கின்றன? உண்மையில், "ஈழக்கொடுமை" போல் நிகழும்-முன்னம், நிகழா-வண்ணம் கூட பாகிஸ்தான் பிரித்து விடப்பட்டிருக்கும். அப்போதைக்கு இருபாலருக்கும் அது மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். பிரிந்து சென்று, 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்போது நடப்பதென்ன?? அத்தனை தொலைவு மலைகளையும், நிலங்களையும் கொண்ட "இந்தியா-பாகிஸ்தான்" எல்லையிலேயே இத்தனை பிரச்சனைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே! ஓர்கணம், "ஈழத்தின் எல்லையை" வரையறுக்கும் வரைபடத்தை பாருங்கள்!! என்னுடைய "பயம்" உங்களையும் தொற்றிக்கொள்ளும்; "கிட்டத்திட்ட" ஈழத்தின் அத்தனை பகுதியும் எல்லையே!!! பின் எப்படி "இலங்கை" எனும் ஓர் சிறிய நாட்டை இரண்டாய் பிரிக்கும்போது - அங்கே அமைதியான சூழல் நிலவும்? பெரிய-இழப்புக்கு முன்னரே பி(ற/ரி)ந்திட்ட இரண்டு நாடுகளுக்கு இடையிலேயே இத்தனை காழ்ப்புணர்ச்சிகள் எனில், மிகப்பெரிய இழப்புகளுக்கு பின் - ஓர் நாடு பிரிந்து இரண்டாகின், எத்தனை பெரிய காழ்ப்புனர்ச்சிகளும், பிரச்சனைகளும் தொடரும்??? நம் கண்-முன்னரே, எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை; நிகழ்-கால சரித்திரத்தை பார்த்த பின்னாவது நாம் உணர்ந்திடல் வேண்டாமா?

        இதையும் தாண்டி, நாம் இலங்கையில் வாழும் தமிழர்களை "இலங்கைத்-தமிழர்கள்" என்று தான் அழைக்கிறோம்! அடையாள-நிமித்தம் என்பதையும் தாண்டி - இந்த மாதிரியான அழைப்பு அவர்களுக்கு என்று "ஓர் நாடு இருப்பதை உணர்த்தவும்" என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்; அது அவர்களின் உரிமை கூட! இங்கே வரும் அத்தமிழர்களுக்கு "அகதிகள்" என்ற பெயரில் எத்தனை இன்னல்கள் விளைவிக்கிறோம் என்பதை நான் விவரிக்கத் தேவையில்லை!!! பின் எப்படி, அவர்கள் நம் இரத்தம் என்று கூறி "வாய்-கூசாமல்" இங்கே அரசியல் என்ற பெயரில் அத்தனை கோமாளிகளும் - இன்னமும் அங்கே எஞ்சியிருக்கும் தமிழர்களை "உசுப்பி விடுகின்றனர்?". இங்கே நான் கேட்டிட விரும்புவது, இது ஒன்று தான்! இந்த அரசியல் கோமாளிகள், இலங்கையில் (எஞ்சி)இருக்கும் தமிழர்களுக்காய் ஏதும் செய்திடல் வேண்டாம்; உண்மையில், அவர்களால் எதுவும் செய்திட முடியாது என்பதே பேருண்மை! அவர்களின், உணர்வும், உணர்ச்சியும் உண்மையாயின் - முதலில் இந்தியாவிற்கு திரும்பி வந்த தமிழர்களை "அகதிகள்" எனும் அடையாளம் அகற்றி - சராசரி, தமிழனாய் உலவிட செய்யட்டும்! அது(மட்டுமே) இலங்கையில் எஞ்சியிருக்கும் மற்ற தமிழர்களுக்கு ஓர் வலிமையையும், நம்பிக்கையையும் தரும்!! இங்கே ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்: "இந்தியா-இலங்கை" இடையே (வெறும்)ஓர் விளையாட்டு போட்டி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; இலங்கையில் இருக்கும் தமிழர்கள் எந்த நாட்டை ஆதரிப்பர்? அல்லது ஆதரிக்கவேண்டும்??

    அவர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையின் வெளிப்பாடே - அவர்களை அடையாளமிட்டு "இலங்கைத்-தமிழர்கள்" என்றழைப்பதில் உள்ள உண்மை. தமிழர்கள் வாழாத நாடே இல்லை; இலங்கையை விட தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பலவுண்டு. "அமெரிக்கா" போன்ற நாடுகளில் வசிக்கும் ஓர் தமிழன் அந்நாட்டு "குடியுரிமையை" வாங்குவதை "கெளரமாய்" கருதுகிறான்; அதை பெரிதும் போராடியும் அடைகிறான்; அதில் அவர்களுக்கு ஓர் "வறட்டு-பெருமிதம்" கூட! வேறு எந்த நாட்டில் இருக்கும் தமிழர்களும் அந்நாட்டை பிரித்துகொடுக்க போராடவில்லை!! பின் எப்படி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் அப்படி ஓர் எண்ணம் விளைந்தது அல்லது விதிக்கப்பட்டது? தமிழ்நாடும், இந்தியாவும் மிக அருகில் இருக்கும் காரணத்தினாலா?? அப்படியிருப்பின், அந்த எண்ணத்தில் "ஒரு விழுக்காது, தவறில்லை!!!". ஆனால், முதலில் இந்தியாவில் - மேற்குறிப்பிட்ட "அகதிகள்" எனும் அடையாளமும், இழி-நிலையும் மாறவேண்டும்! அவர்களுக்கு நம் நாட்டின் ஆதரவு கிடைக்கவேண்டும்!! அதைவிட கொடுமை "ஈழக்கொடுமையின் பொது" தமிழ்நாட்டிலிருந்தோ/ இந்தியாவிலிருந்தோ எந்த "அவசியமான உதவியும்" கிடைக்கவில்லை என்பது தான்; அதை நாம் செய்யத் தவறிவிட்டோம். அதற்காய், நான் அவமானப்படுகிறேன்; வள்ளுவனின் "காலத்தினால் செய்த உதவி" போன்று - ஓர் சிறிய அளவில் கூட தேவையானபோது நாம் செய்யவில்லை. இனியொருமுறை அந்த அவமானத்தை என்னால் தாங்கிட இயலாது என்பதால், என்னுடைய பார்வையில்…

"தமிழ்/தனி ஈழம்" எனும் கனவு, எப்போதும் தேவையில்லை!!!

பின்குறிப்பு: மேலே, அடிக்கோடிட்டது போன்று - இது என்னுடைய பயத்தால் விளைந்தது என்பதை ஒப்புக்கொள்ள எந்த தயக்கம் இல்லை. இந்த பயம், என்னுடைய இனம் இன்னுமொருமுறை இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்கக்கூடாது என்பதால்! "கையாலாகதவனாய்" வெறும் "வாய்ச்-சவடாலில்" மட்டும் அவர்களுக்குள் "நம்பிக்கையெனும் நஞ்சை" விதைத்து - அவர்கள் இன்னுமொரு முறை கொடுமையை-அனுபவிப்பதை "கைகட்டி பார்க்கும் நிலை" வேண்டாம் என்பதால்!! எஞ்சியிருப்பவர்களையாவது, அவர்களுக்கு உரித்தான-உண்மையான சுதந்திரத்தோடு வாழவிட வேண்டும் என்பதால்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக