ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

குழந்தை யாரிடம் வளரவேண்டும்???...


(தலையங்கத்தின் "நீளம்" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்)

      கடந்த வார தலையங்கத்தை தொடர்ந்து, இந்த வாரமும் நாளிதழில் வெளிவந்த செய்தி ஒன்று என்னை நிலைகுலைத்து விட்டது; இந்த செய்தி சார்ந்த என் பார்வையை எழுதவேண்டும் என முடிவெடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. இது தான் சரியான சந்தர்ப்பம்!  கடந்த வாரம் குறிப்பிட்ட தந்தைக்கு நேரெதிர் துருவம்; இரண்டு எல்லையில் இருக்கும் எந்த உறவும் சங்கடம் தான். கடந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்ட தந்தை "சிறுபான்மையில்" ஓர் மிகப்பெரிய கொடியன்; இந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தந்தை "பெரும்பான்மையில்" தன்னிலை தவறியவர். செய்தி இது தான்; "குழந்தையை யார் வளர்ப்பது?" என்ற விவாதத்தின் அடிப்படையில் எழுந்த பிரச்சனையில் ஓர் தந்தை, தன்னிலை தவறி தன்னுடைய மனைவியை (குழந்தையின் தாயை) கொன்றுவிட்டார். இந்த பிரச்சனையின் அடிப்படையையும் அது சார்ந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் கலந்தாயும் முன், படித்த செய்தியின் கரு; மனைவியை கொன்றதற்காய் கணவன் (தந்தை) சிறைச்சாலைக்கு செல்லும் முன் - அந்த பாச மிகு தந்தையும், மகளும், ஒருவொருக்கொருவர் கட்டியணைத்து அழுது தங்களின் பாசத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்துடன், செய்தி வெளியாகி இருந்தது. அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன? உறவுகள் ஆயிரம் இருப்பினும், அது குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் பலன் தரக்கூடும். ஆறு வயது துவங்கி வாழ்க்கை முழுதும் அவ்வாறெனின் அந்த குழந்தையின் வாழ்க்கை என்னாவது? என்று என்னும்போது நம் மனம் பதறுகிறது தானே??

        ஓர் குழந்தை சரியாய் வளர அக்குழந்தை ஒரு குறிப்பிட்ட வயது வரை தாயுடன் தான் வளரவேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆணாதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, அதாவது, ஆண் என்பவன் குடும்ப-வேலைகள் எதுவும் செய்யாது (செய்யவும் தெரியாது), அனைத்தும் பெண் தான் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்த காலகட்டத்தில் வேண்டுமானால், இது சரியாய் இருந்திருக்கலாம். குழந்தை வளர்ப்பது, தாயின் (பெண்) வேலை; பொருளீட்டுவது தந்தையின் (ஆண்) வேலையாய் இருந்திருக்கலாம். இன்று சூழல் வேறு என்பதை என்னுடைய சமீபத்திய தலையங்கத்தில் கூட விளக்கமாய் எழுதி இருந்தேன். இங்கே, வேலைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு, வீட்டு வேலைகள் பகிர்ந்துகொள்ளப்படாத போது அதை ஒரு குறையாய்/ பிரச்சனையாய் இல்லத்தரசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்னமும் குழந்தை வளர்ப்பதில் மட்டும் - அதிலும் குறிப்பாய், கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை வந்த பின் - ஏன் தாய் மட்டுமே (வயது நிர்ணயம் இருப்பினும்) வளர்க்க வேண்டும் என்று சட்டமும் சொல்கிறது?; இல்லத்தரசிகளும் வாதாடுகின்றனர்? இதில் ஏதேனும் ஒரு நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கவேண்டும். ஒன்று, எந்த சூழ்நிலையிலும் குழந்தை வளர்ப்பது பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்று இருக்கவேண்டும்! ஒரு செய்கையில் இருக்கும் இரண்டு விதமான சாத்தியக்கூறுகளையும் (பெண் சூழலுக்கு தக்கவாறு) எடுத்துக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

        இது கண்டிப்பாய் மாறவேண்டும்; எப்படி இன்றைய கணவன்மார்கள் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்களோ, அது மாதிரி பிரச்சனை எழுந்த பின் அல்லது "விவாகரத்து" பெற்றபின் "குழந்தை வளர்க்கும் உரிமை" அந்த தந்தைக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்; அது தான் நியாயம். குழந்தை, தாய்ப்பால் குடிக்கும் பருவத்தை கடக்கவில்லை எனில், நிச்சயம் அது தாயுடன் தான் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்டிப்பாய் எந்த கணவனும் பிரச்சனை செய்யப்போவதில்லை; அதற்கும் காரணம், கணவனுக்கு இயற்கை அல்லது இறைவன் அந்த சக்தியை கொடுக்கவில்லை என்பது தான். நான், இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் வாதம் அப்பருவம் கடந்த குழந்தைகளைப் பற்றித்தான் என்று தயைகூர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள். குழந்தை தாயுடன் தான் வளரவேண்டும் என்பதற்கு பலநாட்களாய் சொல்லப்பட்டு வந்த காரணங்களுள் முக்கியமான ஒன்று, ஆணுக்கு அந்த பொறுமை இல்லை என்பது. ஆனால், இன்று உண்மை நிலை வேறு; ஆணின் பொறுமை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால் தான் "இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?" என்ற தலையங்கம் எழுதவேண்டி வந்தது. எப்படி, ஆணாதிக்கத்தம் உச்சத்தில் இருந்தபோது கூட, குடும்பம் என்பது சிதறாமல் இருந்ததற்கு பெரும்-காரணம் பெண்ணின் பக்குவமும்/ பொறுமையும் தான் என்பது உண்மையோ!, அது போல் இப்போது சிறிய பிரச்னைக்கு கூட குடும்பம் சிதறுவதற்கு காரணமும் பெண்ணின் பக்குவமின்மை மற்றும் பொறுமையின்மை தான் கரணம் என்பதும் உண்மை.

      இதற்கு முழு காரணம், குடும்பம் என்பது இன்னமும் பெண்ணை முதன்மைப் படுத்தி துவங்குவதால் தான்; இந்த முதன்மையை முழுதுமாய்-முறையாய் உணராத போது தான் அன்றும் பிரச்சனை, இன்னமும் பிரச்சனை. இந்த பொறுமை மற்றும் பக்குவத்திற்கு கண்டிப்பாய் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வரமான "தாய்மை" அடையும் நிலையை  சிறந்த உதாரணமாய் கொள்ளலாம். ஆண்கள், அதை ஏற்கத் தயாரில்லை என்று அர்த்தம் இல்லை; இயற்கையோ அல்லது இறைவனோ ஆண்களுக்கு அந்த சந்தர்ப்பம் அளிக்கவில்லை.  அடுத்து சொல்லப்படும் காரணம், வீட்டு வேலைகளை - குறிப்பாய் சமைப்பது - ஆணுக்கு செய்யத்தெரியாது என்பது தான். இப்போது நிலைமையே வேறு! வேலையை சரியாய் செய்யவில்லை என்பதற்காய் இப்போது பிரச்சனைகள் எழுகின்றன!! இது தான் காலச்சுழற்சி; எதுவும் செய்வதில்லை என்பது மாறி "சரியாய்" செய்வதில்லை என்று மாறி இருக்கிறது. எனவே, இக்காரணத்திற்காகவும் குழந்தை தந்தையுடன் வளரக்கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது. இது மாதிரி, எந்த விசயத்தை எடுத்துக்கொண்டாலும், பெண்கள் தங்கள் உரிமைகளை போராடி பெரும் அதே வேலையில், இந்த வேலைகள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வலியுறுத்தப்பட்டு வரப்பட்டுள்ளது. அது கூட ஓர் காரணமாய் இருக்கலாம், ஆண்களின் இந்த மாற்றத்திற்கு! காரணம் எதுவாயினும், வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை!!

     இதில், குழந்தை பெண்ணெனும் போது, கேவலமான ஓர் வாதம் வரும் பாருங்கள்!; அது தான் என்னை மிகவும் காயப்படுத்துவது. "அவள் பருவம் அடைந்தால்" நீ என்ன செய்வாய் என்பது தான் அந்த கேள்வி! பெண்களும், சமுதாயமும் - ஆண்களை - அந்த நிகழ்வுகளில் சேர்ப்பதே இல்லை; அக்குழந்தையின் தந்தை உட்பட! இதே நிகழ்வு, ஆணுக்கும் இயற்கையாய் நடக்கிறது; ஆனால், அது நடைபெறும் விதம் சாதாரணம் என்பது உண்மையாயினும் அவனுக்கும் நடக்கிறது என்பதே உண்மை; பின் ஏன் அதை ஆண் புரிந்து கொள்ளமாட்டான் என்று எண்ணப்பட்டது? இதை ஏன், குறைந்தது அவன் மகளுக்கு நிகழும் போதாவது விளக்கப்படவில்லை? அந்தக் குழந்தை அவன் இரத்தம் அல்லாவா?? எத்தனையோ பெண்கள் இதனை சார்ந்தும் மற்ற பிரச்சனைகளின் அடிப்படையிலும் "ஆண் மருத்துவரை" சந்தித்து விளக்குகிறார்கள் தானே?? என்னதான் தொழிலின் அடிப்படையில் என்றாலும், அவர் ஓர் ஆண்; அவருக்கு அது சார்ந்த விளக்கங்களும், வேதனைகளும், வலிகளும் தெரிந்திருக்கிறது என்பதற்கு மேலாயும், அவருக்கு கற்றுத்தரப்பட்டிருக்கிறது. அது ஏன், ஓர் கணவனுக்கு/ சகோதரனுக்கு அல்லது தந்தைக்கு சொல்லித்தரப்படவில்லை? பின், ஒரு பிரச்சனை வரும்போது மட்டும் ஏன் அதனை சுட்டிக்காட்டி அது ஆணின் தவறு என்பது போல் ஏன் விவரிக்கப்படுகிறது?? இதுவும் நான் மேற்கூறிய வண்ணம், இரண்டு சாத்தியக்கூறுகளையும் ஒருவரே, தங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போல் எடுத்துக் கொள்வது அன்றி வேறென்ன???

      எனவே, குழந்தை தாயுடன் தான் வளரவேண்டும் என்ற கட்டுப்பாட்டில் எந்த வரைமுறையும் இருப்பதாய் எனக்கு படவில்லை; கண்டிப்பாய் இந்த விதியும் தளர்த்தப்பட வேண்டும். நான் முன்பே கூறியிருந்தவாறு, என்ன தான் பாசத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வை பார்ப்பினும், ஒரு கணவனாய் அவர் செய்ததில் சிறிதும் நியாயம் இல்லை. எனினும், அவர்களிடையிலான உண்மை நிலையை கண்டிப்பாய் ஆராய வேண்டும். மேலும், நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில்  அக்குழந்தை எட்டு மாதத்தில் இருந்தே தன் தந்தையுடன் வளர்ந்ததாய் தெரிகிறது. திடீரென, அந்த மனைவி வந்து பிரச்சனை செய்திருக்க வாய்ப்பேயில்லை; அப்படி இருப்பின் அது(வும்) தவறு கூட. அதனால், அந்த பிரச்சனையின் விதத்தை - அதன் ஆழத்தை கண்டிப்பாய் ஆராய்ந்தறிய வேண்டும். அந்த மனைவியை கொலை செய்யும் அளவிற்கு அந்த தந்தையை கொண்டு செல்ல இந்த இடைவெளியில் நடந்த நிகழ்வுகள் தான் முக்கிய காரணமாய் இருக்கும். எனவே, இந்த அடிப்படையில் அந்த தந்தையின் நிலை என்ன என்பதை கண்டறிய வேண்டும். இது கண்டிப்பாய், அந்த தந்தையை ஆதரிக்கும் எண்ணத்தில் இல்லை; ஆனால், அந்த குழந்தையின் எதிர்காலத்தை முக்கியமாய் கருத வேண்டும். மேலும், அந்த குழந்தை தந்தையுடன் மிகுந்த பற்றுடன் இருப்பதை நாளிதழில் வந்த புகைப்படமும் அந்த பாசத்தை அவர்கள் (காவலர்கள் உட்பட) விவரித்த விதத்திலும் புரிந்து கொள்ளமுடிகிறது.

       கண்டிப்பாய், ஒரு நல்ல தந்தையாய் திகழ்ந்திருக்கிறார்; அவர் நல்ல கணவனாய் இராததற்கு நான் என்னுடைய மற்றுமொரு தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் விதிவிலக்கான காரணம் உண்டா என்பதை ஆராய வேண்டும். அது கண்டிப்பாய் அக்குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உதவும். சென்ற வாரம், மனித நேயமே இல்லாத ஓர் தந்தை தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த வாரம், பாசம் மிகுந்த ஓர் தந்தை தன்னிலை தவறிய காரணத்தை அறிந்து அவரின் மகளின் எதிர்காலம் கருதி அதிகம் தண்டிக்கப்படக்கூடாது என்று எழுதி இருக்கிறேன். இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது; முதல் நிகழ்வில், அக்கொடிய தந்தை பலநாட்களாய் அக்குழந்தையை தொடர்ந்து சித்தரவதை செய்து அந்த செய்கையால் அக்குழந்தை இறந்துவிட்டது. ஆனால், இந்த நிகழ்வில் - ஓரிரு நிமிடத்துளிகள் தன்னிலை தவறியதன் விளைவால் அந்த மனைவி கொலைசெய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாய், அந்த கணவன் தன்னுடைய மனைவியை கொன்றதை நினைத்து - தன்னுடைய "மகளின்" என்திர்காலம் கருதியாவது - இப்போதே கவலை கொள்ள நினைத்திருக்கக்கூடும். இந்த "உணர்தலை" விட மிகப்பெரிய தண்டனை எதுவும் இருக்கமுடியாது. இந்த "உணர்தல்" வரவேண்டும் என்பதால் தான் கடந்த வார தலையங்கத்தில் தண்டனை வேண்டும் என்றேன்; இந்த நிகழ்வில் "உணர்தல்" இப்போதே வந்திருக்கும் என்பதால், தண்டனை வேண்டாம் என்கிறேன்.

       சமீபத்தில் தந்தை-மகள் பாசத்தை உணர்த்தி, அந்த மகளை தன்னிடம் வைத்துக்கொள்ள போராடும் "மனநிலை பாதிக்கப்பட்ட" ஓர் தந்தையின் நிலையை உணர்த்தும் ஓர் தமிழ்த்திரைப்படம் வந்து அனைவரின் ஆதரவுடன் வெற்றியும் பெற்றது. மனநிலை சரியாக உள்ள ஓர் தந்தைக்கு இந்த உரிமை மறுக்கப்படும் போது அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும். உண்மையில், அந்த இயக்குனர் பெருமளவில் பாராட்டப்பட வேண்டியவர்; எனினும், அந்த தீர்ப்பையும் மீறி தந்தையே அம்மகளை பெண் வீட்டாரிடம் கொடுப்பது போல் முடிவு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியாயின், அத்தந்தை அந்த மனநிலையிலும் அக்குழந்தையை அந்த தருணம் வரை சிறப்பாய் வளர்த்ததாய்  கான்பித்திருக்கத் தேவையில்லை; அந்த தந்தை பின் எதற்காய் - எந்த பிடிமானத்திற்காய் வாழ்வான்?. மேலும், அது மனநிலை தவறிய தந்தை (அல்லது தாய்) வளர்க்கும் குழந்தை சரியாய் வளராது என்ற தவறான கண்ணோட்டத்தை(கூட) கொடுக்கக்கூடும்; பெரும்பான்மையான "மனநிலை தவறியவர்கள்",  மனநிலை கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்பது தான் கசப்பான உண்மை. கண்டிப்பாய், அந்த இயக்குனர் சமுதாயத்தின் விமர்சனம் கருதியோ அல்லது பெண்களையும் பெண் வீட்டாரையும் சமாதானப்படுத்துவதற்காகவோ அவ்வாறு செய்திருக்கக் கூடும். இல்லையேல், நீதிமன்றத்தின் தீர்ப்பையே முடிவாய் விட்டிருக்கவேண்டும்.

         ஒரு வேலை, அந்த இயக்குனர் அத்தந்தையின் உயரிய குணத்தை உணர்த்தக்கூட அப்படியொரு முடிவை அளித்திருக்கக் கூடும். ஆனால், நீதிமன்றத்தோடு விட்டிருப்பின் சரியான மனநிலையுடன் போராடும் தந்தைகளுக்கு அது மிகப்பெரிய ஊக்கமாய் இருந்திருக்கும். ஆனால், இந்த முடிவிலும் நான் ஒரு பெரிய சமுதாயப் பார்வையை பார்க்கிறேன். அது! என் மகள் நன்றாய் இருக்கவேண்டும் என்று மனநிலை சரியில்லாத தந்தை கூட விரும்புவதை உணர்த்துவதாய் பார்க்கிறேன். இங்கே மிக முக்கியமான ஒன்று! இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட தம்பதியர் "இந்தியர்" அல்ல; தமிழகத்தில் வாழும் வேறு நாட்டவர் என்பது தான். இங்கே இன்னுமொன்று புலப்படுகிறது; "தந்தை-மகள்(மகன்)" உறவிற்கு மொழி, மதம் மட்டுமல்ல எந்த நாட்டவர் என்பதும் முக்கியம் இல்லை; இதில் பாசம் தான் அடிப்படை. எனவே, இந்த பிரச்னையை கணவனும் - மனைவியும் தங்களுடைய காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாது, அக்குழந்தியின் எதிர்காலத்தை முன்னிறுத்தி அணுகவேண்டும். ஏனெனில், தன் குழந்தை யாரிடம் "சரியாய்" வளரும் என்பதில் அக்குழந்தையின் பெற்றோர் தவிர, வேறு யார் தெளிவாய் முடிவெடுத்து விட முடியும்? எனவே, குழந்தை யாருடன் வளர வேண்டும் என்பதில் எந்த கட்டுப்பாடும் இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது. தேவை எனில், பெற்றோர் பிரிந்திருக்கும் வேலையில் கண்டிப்பாய் (தாய்ப்பால் அருந்துவதை தவிர்த்த) குழந்தை...

தந்தையுடன் தாராளமாய் வளரலாம்!!!

8 கருத்துகள்:

  1. ஒரு தந்தையின் பாசத்தை வெளிபடுத்திய உங்களுக்கு நன்றி. இறைவன் உங்களை போன்றவர்களை நீதித்துறையிலும், வழக்கரிங்கராகவும் நியமனம் செய்யவேண்டும்.ஆனால் நாம் சட்டத்தை நிர்ணயம் செய்யும் சட்டசபை, லோக்சபை இவற்றில் இல்லை.நான் சாதாரண குடிமகன். நீங்கள் நன்கு சம்பாதிக்கும் உயர்ந்த குடிமகன்.நம்மை போன்றவர்களை சட்டம் இயற்றுபவர்கள் கவனிப்பது இல்லை.
    தந்தையின் பாசத்தை,தந்தையின் அருமையை,தந்தை குடும்பத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிவுறுத்த நீதிமன்றம் துளியும் அக்கறை எடுத்து கொள்வது இல்லை.
    மனைவி கொடுமை செய்கிறாள் என்பதை என் அனுபவத்தில் எந்த காவல் துறையும் சரியாக விசாரணையை செய்து கணவனுக்கு ஜீவனாம்சம் பெற்று தருவது இல்லை. ஒரு சாதாரண தந்தையாய் என்னால் என் குழந்தைகளை என்னிடம் வளரவேண்டும் என்று போராட்டம் செய்து வளர்க்க முடியாமல்,பரிதாபமாக கூனி,குறிகி,அடிபட்டு,என் சகோதரி எனக்கு கொடுத்த தங்க செயின் பறிகொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்று,பெற்றோரால் பாதுகாக்கபட்டு வேலைக்கு செல்ல பிடிக்காமல்,வேலைக்கு சென்றாலும் அங்கெ அழுதுகொண்டு இதனால் என் தந்தையை அநியாயமாக பறிகொடுத்துவிட்டு இன்று தாயுடன் மனஉளைச்சலில் இருக்கிறேன்.என் தாய்க்கு உடல்நிலை சரியில்லை.நிற்க முடியவில்லை.என் பிள்ளைகளை என்னிடம் தந்து விட நான் எவ்வளவு கெஞ்சியும் தர மறுத்து 10,000 அவள் சம்பாதிப்பதாகவும்,நான் பைத்தியமாக அலைந்து கொண்டுள்ளேன் என்றும் என் அண்ணியிடம் பேசுகிறாள்.
    என் மனைவி ஜாதகத்திலும் அவள் என் ரத்தத்தை உறிஞ்சும் ரத்த காட்டேரி என்றும்,மாங்கல்ய தோஷம்,தார தோஷம்,நாக தோஷம் உள்ள பெண்ணை உன் தலையில் கட்டிவைத்து விட்டனர் என்றும்,இதனால் என் உயிருக்குத்தான் ஆபத்து என்றும் ஆலோசனைகள் சிறந்த ஜோதிடர்களால் தரபெற்றேன்.
    என் தந்தை இழந்த துயரத்திலும் நாம் இங்கு விவாதிப்பதால் என்ன பயன் எனக்கு? நான் விவாகரத்து வழக்குகள் பற்றிய உங்கள் தலை அங்கத்திற்கு என் கருத்துகளை எழுதிய பின்னர் என் மனைவியை அழைக்க என் தந்தை,மற்றும் இருவருடன் என் மாமனார் வீடு சென்று என் தந்தை முன்னிலையில் பலமாக அடிவாங்கி,செயின் பறிகொடுத்துவிட்டு,காவல் துறையும் எனக்கு நிவாரணம் தராததால் அதையும் என் உணர்வுகளை அந்த தலை அங்கத்தில் எழுதி இருந்தேன்.
    பின் ,மன உளைச்சலில் படிபதையே நிறுத்தி இருந்தேன்.உங்களின் எழுத்துக்கள் எனக்கு நிம்மதி தருகின்றன.குழந்தைகள் தந்தையிடம் வளர வேண்டும் என்பதே இயற்கை என்பதை முன்னர் குறிப்பிட்டு இருந்தேன்.அப்பா புறகணிக்கப்பட்டு உள்ள வீடுகளில் குழந்தைகள் நிலை என்ன?இதையும் குறிப்பிட்டு இருந்தேன்.மீண்டும் இங்கே குறிபிடுகிறேன்.
    தந்தை புறக்கணிக்கப்பட்ட வீடுகளில் வளரும் குழந்தைகள்:
    தற்கொலைக்கு 5 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
    தாயை விட்டு ஓட 32 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
    நடத்தை கோளாறுகள் ஏற்பட 20 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
    கற்பழிப்பு செய்ய, செய்யப்பட 14 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
    உயர்நிலை பள்ளி கைவிட 9 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
    இரசாயன பொருட்கள் துஷ்பிரயோகம் 10 மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
    ஒரு அரசு சார்ந்த சிறார் சிறை கல்வியில் முடிவடையும் வாய்ப்பு 9 மடங்கு அதிகமாக உள்ளது.
    சிறையில் முடிவடையும் வாய்ப்பு 20 மடங்கு அதிகமாக உள்ளது.இவற்றை என் மனைவிக்கு பக்குவமாக புரிந்து கொள்ளும்படி பல முறை விளக்கியும்,மேலும் எனது b.ed புத்தகத்தில் இருந்து கணவன்,தந்தையின் அவசியத்தையும் விளக்கி கூறியும்,கேட்காமல்,பல முறை counselling trichy,chennai,பெரம்பலூர்,துறையூர் ஆகிய நகரங்களில் சிறந்த மருத்துவர்களை கொண்டு சேர்ந்து வாழ அறிவுறுத்தியும் பணம் தான் எங்களுக்கு விரயமானது.இதனாலும் மன உளைச்சல் உள்ளது.ஆகவே என் குழந்தைகள் நலன் கருதி என் குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று புலம்பிகொண்டுள்ளேன்.என் புலம்பல் உங்கள் காதுகளை எட்டியுள்ளன.நான் மீண்டும் ஆரோக்யமாக,சாதாரணமாக நடமாட வேண்டும் என்றால் என் குழந்தைகள் என்னிடம் தான் இருக்கவேண்டும்.என் குழந்தைகளின் அப்பா என்ற வார்த்தைகள் மட்டுமே எனக்கு ஆகாரம்.என் குழந்தைகளின் பேச்சே என் மூச்சு.என் குழந்தைகள இன்றி நான் இல்லை.வளர்ந்து பெரிய பிள்ளைகளா ஆன பின் பணத்திற்காக வரும் நேரம் கொடியது.பாசத்தை பார்க்காமல் என்னால் பணம் கொடுக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனந்த்!

      கிட்டத்திட்ட ஓராண்டிற்கு பின் உங்களிடம் இருந்து ஒரு பின்னூட்டம். இடைப்பட்ட காலத்தில் உங்கள் வாழ்க்கை தழைத்திருக்கும் என்றே நம்பியிருந்தேன். ஆனால், உண்மை நிலை அவ்வாறில்லை என்று தெளிவாகிறது.

      1. நான் முதலில் உங்களுக்கு கூற விரும்புவது, தற்கொலை என்பது இதற்கு தீர்வல்ல. நீங்கள் மட்டுமே இந்த உறவுகளிடம் இருந்து பிரிந்து செல்வீர்கள்! ஆனால், இந்த உறவுகள் அப்படியே எஞ்சி நிற்கும். அதனால், உங்கள் குழந்தைகள் நலனை முன்னிறுத்தி, அந்த எண்ணத்தை அறவே நீங்கிடுதல் வேண்டும்.
      2. மன்னிக்கவும்! எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டெனினும், சாதகம்-சோதிடம் இவைகளில் நம்பிக்கை இல்லை. என்னை பக்குவப்பட செய்ய வைக்கிறது என்பதால் "நாள் இராசி பலன்" மேல் சிறிது நம்பிக்கை உண்டு என்பதை ஒரு மனதங்கமாய் கூட எழுதி இருக்கிறேன். எனவே, சாதகம்-சோதிடம் சொல்வது போல் உங்கள் உறவு இப்படித்தான் இருக்கும் என்று நான் நம்பவில்லை.
      3. இப்போதைக்கு நீங்கள் உடனடியாய் வேலைக்கு செல்லவேண்டும். பொருளீட்டுதல் - குடும்பத்தின் ஓர் அங்கம்! அதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. சிறிது காலத்திற்கு நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்துதல் நலம். முதலில், நீங்கள் உங்கள் சுயத்திற்கு திரும்புங்கள்.
      4. உங்கள் பிள்ளைகள் மிகவும் இளையவர்கள். அவர்களுக்கு இப்போது உங்கள் அருமையும்/அன்மையும் புரிய வாய்ப்பில்லை. அவர்கள் வளரும் வரை நீங்கள் உயிரோடு இருத்தல் அவசியம். உங்களால் மட்டுமே உங்களின் உண்மைத்தன்மையை அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
      5. நீங்களே சொல்லியிருப்பது போல் சட்டங்களும்/நீதித்துறையும் பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இருப்பது அனைவரும் அறிந்ததே. அது பல காலங்களாய், மிகப்பெரிய கொடுமைகளை பெண்கள் சந்தித்ததால் "மிகப்பெரிய போராட்டங்கள்"கொண்டு வரையறுக்கப்பட்டவை. நான் அடிக்கடி சொல்வது போல், மிகப்பெரிய கால/சமுதாய/கலாச்சார - மாற்றத்தின் இடைப்பட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். இம்மாதிரி பல பிரச்சனைகள் உள்ளன. இவைகளை, நாம் பொறுமை கொண்டு மட்டுமே மாற்றுதல் சாத்தியம். அதற்கு நாம் உயிரோடும்/சுயத்தோடும் இருத்தல் அவசியம்.

      எனவே, உடனடியாய் உங்களின் பணியைத் தொடருங்கள். கடினமான/ஈடுபாடான வேலை, இம்மாதிரியான எந்த பிரச்சனையையும் கடக்க உதவும். மேலும், இம்மாதிரி ஏதாவது ஒரு பிரச்சனையையாவது சந்திக்காமல் வாழ்ந்தவர் இதுவரை எவருமில்லை! இனியும் இருக்கப்போவதில்லை!!

      வாழ்க்கை ஒரு சுழற்சி. உங்கள் முறை வரும்போது நீங்கள் உயிரோடு இருத்தல் அவசியம். உங்கள் பிள்ளைகள் வளரும் வரை இருத்தல் அவசியம். அதில் மட்டும் இப்போதைக்கு கவனம் செலுத்துங்கள்; மற்றவை தானாய் நிகழும்.

      "சொல்லுதல் யார்க்கும் எளிதாம்..." என்று வள்ளுவன் வாக்கு என் முன்! ஆனால், வேறு வழியில்லை. நான் சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனெனில், அதுதான் இப்போதைக்கு உங்களுக்கு இருக்கும் ஒரே வழி. அடக்குமுறை கொண்டு சாதித்தல் சாத்தியம் இல்லை - குறைந்த பட்சம் உங்கள் பிள்ளைகள் வளரும் வரையாவது.

      மனமார்ந்த வாழ்த்துகள்.

      நீக்கு
    2. நன்றி.நல்ல இணையதள தோழமைக்கு.

      நீக்கு
  2. நீங்கள் எனக்கு நீதிபதியாக இருந்தால் என் பிரச்னைகள் தீரும்.எளிதாக இன்டர்நெட்டில் விவாதம் செய்து என் பிள்ளைகளை என்னிடம் சேர்த்து இருப்பீர்கள்.பிள்ளைகளுக்கு பேர் சூட்டிய நிகழ்வை ஏற்கனவே நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன்.உங்களை போன்றவர்கள மட்டுமே நீதி துறையில் இருக்கவேண்டும்.நீண்ட நாட்களுக்கு பின் என் தந்தையை பறிகொடுத்துவிட்டு வறிய சூழலில் என் உணர்வை எழுதுகின்றேன். உங்கள் நண்பர்கள் துணையுடன் பிள்ளைகள் அப்பாவிடம் வளரவேண்டும் என்பதை சட்ட சபையிலும்,பாராளுமன்றதிலும்,நீதி துறையிலும் வலியுறுத்த வேண்டும்.ஆண்கள் பாதுகாப்பு சபை,சென்னையில் உறுபினராக உள்ளேன்.இதுவரை முடங்கி,மூலையில் கணனியில் புதைந்து போயுள்ள எனக்கு தீர்வு இல்லை.
    என் மனைவியால் எனக்கு கிடைக்கும் உடலுறவு இன்பத்தை விட என் பிள்ளைகளை பிரிந்து இருப்பதே எனக்கு வலியை,வேதனையை,பலவீனத்தை,தற்கொலை எண்ணத்தை தருகின்றது.மூலையில்,முடங்கிக்கொண்டு என் தாயையும் வேதனை படுத்திக்கொண்டு உள்ளேன் என்றால் என் பிள்ளைகள் என்னிடம் இல்லாததே காரணம்.கோயில்,கோயிலாக சுற்றியும்,மாந்த்ரிகதிர்க்கு செலவு செய்தும் என் பிள்ளைகள்,திருந்திய மனைவி என்னிடம் வரவில்லை..உடல் உறவு இன்பத்திற்கு என்று யாரிடமும் செல்லவும் பிடிக்கவில்லை. புலம்பல்கள் காது கொடுத்து கேட்க முடியாத அளவில் என் தாய் என்னை பொறுத்துக்கொள்ள முடியாமல் நோந்து போயுள்ளார்.
    இன்னும் என் பிள்ளைகள் ஜாதகமும் என் மனைவி என்னிடம் சேர வாய்ப்பு இல்லை என்பதேயாகும்.
    மனைவியிடம் நன்றாக உடல் உறவு இன்பத்தை பெற்றுவிட்டு,பின்னர் அது இல்லாமல் பைத்தியம் பிடித்துகொண்டு அலைகிறேன் என்று சிலர் நினைக்கலாம்.அதில் குறைந்த அளவு உண்மையும் இருக்கலாம்.ஆனால் பிள்ளைகளே மனைவியை விட முக்கியமானவர்கள் எனபது என் உணர்வு.
    நல்ல கணவனைப் பெறுவதற்கு அந்த பெண்ணின் ஜாதகத்தில் 4,6,8 ல் தனித்த செவ்வாய்,7ல் குரு,8ல் சனியுடன்,ராகு போன்ற கிரகங்கள் இருக்க கூடாது.முக்கியமாக இந்த அமைப்பு மிக,மிக கொடியது.கணவனை கொல்லாமல் விடாது.நான் பிழைத்தேன் என்றால் எனது பெற்றோர் செய்த பூர்வ புண்ணிய பலன் தான் காரணம்.இதை ஜோதிடரும் வலியுறுத்தினர்.
    கணவனை குறை சொல்லும் முன் பெண்களின் ஜாதகத்தையும்,பூர்வ புண்ணியம் அமைப்புகளையும்,பெண்ணின் பெற்றோர் செய்யும் கொடுமைகள் பற்றியும் அறிந்து கொண்டு பின் அந்த கணவனை பற்றி யோசிக்கவேண்டும்.நோயும் அவளே,நோய்க்கு மருந்தும் அவளே என்பது உடல் உறவுக்கு மட்டும் பொறுத்தது அல்ல.ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்பதையும் நினைத்து பார்க்கவேண்டும்.ஆண் ஜாதகம்,பெண் ஜாதகம் இருவர் ஜாதகத்திலும் மாங்கல்ய தோஷம் இருக்கும்.எனக்கு அப்படித்தான் உள்ளது.எனக்கும் நாக தோஷம் உள்ளது.ஆனால் செவ்வாய்தோசம் இல்லை.என் மனைவி அளவுக்கு மற்ற தோசங்கள் இல்லை..நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனந்த்!

      எனக்கும் அப்படியோர் கற்பனை எழுவதுண்டு. இது போன்ற விசயங்களில் எல்லோருக்கும் ஒரு படிப்பினை உறுவாக்குவதாய். ஆனால், வாழ்க்கை வெறும் வாழ்க்கை அல்லவே?! ஆனால், என்னால் முயன்ற அளவிற்கு பலரையும்; இப்புரிதல்களை கொண்டு சேர்ப்பதற்கே என் எழுத்துகள்.

      முந்தைய கேள்விக்கு கூறியது தான். உங்கள் பணியை உடனடியாய் தொடர்ந்து; அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பிள்ளைகள் வளரும் வரை காத்திருத்தல் மிக முக்கியம். அதற்குள், உங்கள் மனைவியின் செயல்களிலும் மாற்றம் எழக்கூடும். வாழ்க்கை; ஒவ்வொருவருக்கும் தேவையான பாடத்தை போதிக்க தவறியதேயில்லை; நாம் வேண்டுமானால், அதை புரிந்துகொள்ள தவறக்கூடும்! ஆனால், வாழ்க்கை கட்டாயம் அப்படியோர் நிகழ்வை நிகழ்த்தும். அதனால், உங்களே மனைவியே சூழலை புரிந்துகொள்ளும் நிலை வரலாம். நீங்களும், எல்லாவற்றையும் இன்னமும் தீர்க்கமாய்/ஆழமாய் பார்க்கும் பக்குவம் அடைவீர்கள். அதை விடுத்து; எந்த அடக்குமுறையும் இல்லை, அவசர-முறையும் கைகொடுக்கப் போவதில்லை! மாறாய், அது சூழலை இன்னமும் வீரியமாக்கக்கூடும். எனவே, இப்போதைக்கு உங்கள் சுயத்திற்கு திரும்ப முயலுங்கள்.

      மீண்டும், மனமார்ந்த வாழ்த்துகள்.

      நீக்கு
  3. https://www.facebook.com/groups/611582105592962/permalink/732078933543278/ சென்று படியுங்கள்.எனது சமூகம் சார்ந்த குமுறல்களை எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் கருதுவதுபோல் கடினமான,ஈடுபாடுடைய நல்ல பணி மனமாற்றத்தை தரும் என்பது உண்மை. நம் பாதையை நன்றாக பயணம் செய்ய எனது இந்த முகநூல் பக்கத்தையும் படிக்கவும்.உங்களை நான் சிரம படுத்தினால் மன்னிக்கவும்.
    https://www.facebook.com/pages/வசிய-மருந்து-பாதிப்புகள்/254003914800825
    இதற்கு நிறைய சான்றுகள் தரமுடியும்.நீங்கள் நம்புவீர்கள் என்பதாலும் மேலும் இணையத்தில் இதை பற்றி சிலர் எழுதி உள்ளதாலும் படித்த அனுபவ சான்றுகள் சேமித்து வைக்காததாலும் தர சோம்பேறித்தனம் பட்டு விட்டுவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகளை பிரிந்து வாடும் ஆயிரக்கணக்கான தந்தையர்களில் நானும் ஒருவன். ஒரு தந்தையாக இருந்து தனது குழந்தைகளுக்கு என்ன செய்யவேண்டுமோ, அதைக்கூட செய்யமுடியாமல் இயலாது இருக்கிறோமே என்ற வருத்தம் ஒவ்வொரு நிமிடமும் என்னை கொன்றுகொண்டிருக்கின்றது. என்னுடைய குழந்தைகள் தாயின் தவறான வழிகாட்டலால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் எதிரிகளைப்போன்று வளர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். காலம் கனியும், கடவுள் கிருபை செய்வான் என் குழந்தைகள் என்னை புரிந்து கொள்கிற காலம் விரைவில் கடவுள் ஏற்படுத்துவான் என்கின்ற நம்பிக்கையுடன் என் காலங்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு