வெள்ளி, டிசம்பர் 02, 2011

வேண்டியது கண்மணிகள்! "கணினிகள்" அல்ல!!...




*******


       சமீபமாய், இரண்டரை வயது கூட ஆகாத என் மகளுக்கு ஒரு பள்ளியில் சேர்வதற்காய், நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்திருந்தது. எனக்கு, மிக்க மகிழ்ச்சி; கூடவே, ஆச்சரியமும், அதிர்ச்சியும் - இந்த வயதிலேயே நேர்முகத் தேர்விற்கு செல்கிறாளே என்று! இந்நிகழ்ச்சியை இங்கிருக்கும் என் நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்ட போது, அவர் சிரித்துக் கொண்டே நமக்கு இந்த வயதில் கூட "ஒரு அழைப்பு வரவில்லை" என்றார். அவர் சொல்லும் போது, நானும் சிரித்தேன்; ஆனால், பிறகு அதைப் பற்றி சிந்திக்கும்போது பேரதிர்ச்சி அடைந்தேன். அதை, தலையங்கமாய் எழுதுவது மிக அவசியமாய் பட்டது. பள்ளிக்கூடம் என்பது உருவில்லாத ஒரு "பொருளை", அதன் தன்மை மற்றும் தரம் அறிந்து பொருத்தமான "அச்சில்/ உருவில்" வார்க்கும் பட்டறை போன்றது. அவர்கள், எந்த குழந்தையையும் அதன் தகுதிக்கேற்ப மெருகேற்ற வேண்டியவர்கள்; அது தான் அவர்களின் கடமை மற்றும் தொழில்-தர்மம். ஆனால், அவர்களே தகுதியான குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் ஓர் "அவல நிலை" எதனால் வந்தது? இது நம் நாட்டின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்காதா?? மேலும், இந்த வயதில் ஒரு குழந்தையிடம் எந்த கேள்வியை கேட்டு அவர்களின் தரத்தை அறிய/ பிரிக்க முடியும்?   இதைப் பற்றி யோசித்தபோது, நாம் குழந்தையின் படிப்பு எப்படி இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பதாய் எனக்கு பட்டது. அதைப் பற்றியும் மற்றும் இந்த நேர்முகத்தேர்வு குறித்தும் இங்கே அலசுவது முக்கியம் எனப் படுகிறது.   

      இதற்கு பள்ளியை குறை கூறுவதை விட, பெற்றோர்களையே பெரிதும் குறை கூறவேண்டும் என்று எனக்கு தெளிவாய் தெரிகிறது. பெற்றோர்கள், அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே "அளவுகோலாக" கொள்ளக்கூடாது என்பதே என் வாதம். அதிக மதிப்பெண்கள் (மட்டும்)  வாங்குவதால் என்ன பயன்? ஒரு புத்தகத்தில் இருப்பதை அப்படியே படித்து, மனனம் செய்து, தேர்வெழுதி அதிக மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் எப்படி அறிவாக ஆக முடியும்? அதற்காய் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டாம் என்று கூறவில்லை! ஆனால், "நடைமுறை அறிவு (Practical Knowledge)" மற்றும் படிப்பதை சிந்தித்து அதன் பொருளை உணருவது தான் "மிக, மிக முக்கியம்". உணர்ந்து படிப்பது பழக்கமாயின், ஒவ்வொரு குழந்தையும் தாம் படிப்பது என்னவென்று உணர்ந்து படிப்பர்; படிப்பது என்னவென்று தெளிவாய் தெரியும் போது, படிப்பது எதற்கு, அதை அங்கு எப்படி எவ்வாறு உபயோகிக்கவேண்டும் என்ற அறிவும் தானாய் வ(ள)ரும். இது வ(ளர்)ந்துவிட்டால், படிப்பது மறப்பது என்பது சாத்தியமே இல்லை; இங்கு பெரும்பான்மையான குழந்தைகள் குறைவாய் மதிப்பெண்கள் பெறுவதற்கு மறதியே காரணம். இந்த மறதிக்கு, மிக முக்கியாமான காரணம் அவர்கள் படிப்பதை புரிந்து கொள்ளாதது தான்; அதாவது அதை சரிவர தெளிவுபடுத்தாத நடைமுறையில் உள்ள பாடத்-திட்டம் மற்றும் தேர்வு-முறையே. எனவே, இந்த அடிப்படையை சரி செய்யாமல் நாம் குழந்தை படிக்கவில்லை - அதிக மதிப்பெண் பெறவில்லை என்றே (இன்னமும்) குறை கூறிக்கொண்டு இருப்பது தவறு.   

      ஒரு சில பள்ளிகள் மிக நல்ல பாடத்-திட்டங்களையும், தேர்வு-முறையையும் கொண்டுள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை; அந்த பள்ளிகளில் மதிப்பெண்ணை குறிப்பிட்டு சான்றிதழ்களை கூட கொடுப்பதில்லை. இத்தனை ஆண்டுகளாய், "உயர் வகுப்பில்/ உயர்நிலை வகுப்பில்" மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் எவரேனும் ஒருவர் அதற்கு மேல் என்ன சாதித்தார்கள் என்பதை எந்த மாணாக்கரோ, பள்ளியோ, பெற்றோரோ (அல்லது ஊடகமோ) கவனித்து வெளியிட்டு இருக்கிறார்களா? இங்கு கண்டிப்பாய், ஏதேனும் விதிவிலக்கான மாணாக்கர் இருந்திருக்கக் கூடும் - இருக்க வேண்டும். என்னுடைய கேள்வி, அவர்களனைவரும் மேற்கொண்டு சாதித்தது என்ன? பெரும்பான்மையாய் சாதனை செய்பவர்கள் முதல் மதிப்பெண் எடுக்காத மற்றவர்கள் தானே?? இன்னும் சொல்லப்போனால் சராசரியான மாணவர்கள் தான் அதிகம் என்று கூட கொள்ளலாம். அப்படியாயின், பெற்றோர்கள் முதற்கொண்டு ஏன் அனைவரும் அனைத்து மாணாக்கர்களையும் அதிக மதிப்பெண் எடுக்க நிர்ப்பந்திக்க வேண்டும்? மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற ஐயத்தில், முடிவு வரும் முன்னே தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அவலங்களும் நம் நாட்டில் (மட்டும்) அல்லவா நடக்கின்றது!!! மேலை நாடுகளில், இந்த கொடுமை இல்லை; ஏனெனில், அவர்கள் ஆறு வயது வரை - மேற்சொன்ன நடைமுறை-அறிவை வளர்க்கும் செயல்களையே போதிக்கின்றனர். இதை அனைவரையும் போல், நானும் முதலில் தவறாய் பார்த்தேன்; ஆனால், இங்கிருக்கும் பத்தாம் வகுப்பு மாணவனின் அறிவாற்றலை(கூட) பார்க்கும் போது என் எண்ணம் "பெருந்தவறு" என்று புரிந்தது.

    எனக்கு, இந்த வயது குழந்தையிடம் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது எவ்வளவு யோசித்தும் விளங்கவே இல்லை. "உன் பெயர் என்ன?; உன் தாய் பெயர் என்ன?? உன் தந்தை பெயர் என்ன???" என்பன போன்ற கேள்விகளாகவே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அப்படி இருப்பின், அந்த அடிப்படையே தவறு என்பேன்; இங்கே(யே) குழந்தைகளின் "சிந்தனை மற்றும் செயலாக்கத் திறன்" அழிக்கப்படுகிறது என்பேன். ஒருவேளை, பின்னால் அதிக மதிப்பெண் வாங்கமுடியுமா என்ற அடிப்படையில், மனனம் செய்யும் திறன் தான் சோதிக்கப்படுகிறதோ??? நான், ஒரு பள்ளியின் நிர்வாகியாய்  இருப்பின் என்னுடைய சோதனை வேறு மாதிரி  இருக்கும்! "நேர்முகத்" தேர்விற்கு வரும் குழந்தையிடம் விளையாட்டு பொருட்களை கொடுப்பேன்; 1. அப்பொருளை, அப்படியே வைத்து விளையாடும் குழந்தை "மனனம்" செய்யும் குழந்தையை போன்றது - கற்றுக்கொடுக்கப்பட்டதை மட்டுமே செய்யும். 2. அப்பொருளை விளையாடுவதை நிறுத்திவிட்டு அதை திருப்பி பார்த்து உற்று நோக்கும் குழந்தை, சிந்தனை திறன் கொண்ட குழந்தை. 3. அப்பொருளை கடினமாய் கையாண்டு (வேகமாய் உபயோகித்து) அதை உடைக்கும் செயலை செய்யும் குழந்தை "வலிவாற்றல்" மிக்கக் குழந்தை. அதை விளையாட்டு போன்ற துறை சார்ந்தவைகளில் திறமை மிகுதியாய் உள்ளவாறு உருவாக்கமுடியும். நான் இந்த மூன்று குழந்தைகளையும் தேர்ந்தெடுப்பேன்; அனைத்து திறனையும் கொண்ட வெவ்வேறு மாணாக்கர்கள் கிடைப்பார்கள். 

   பெற்றோர்களே! மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்ற தங்களின் எண்ணத்தை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்; அதை மட்டுமே நீங்கள் சிந்தித்து அதை நோக்கியே நீங்கள் பயணிக்கும் போது கண்டிப்பாய் நீங்கள் உங்கள் குழந்தையின் தனித்திறனை கண்டறிய தவறி விடுவீர்கள்/ விடுகிறீர்கள். இந்த "அதிக மதிப்பெண்" என்ற பார்வை மாறி வரத் துவங்கி உள்ளது என்பதை நான் கண்டிப்பாய் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.  இந்த பார்வை மாறவில்லையெனில், ஒரு மாணாக்கர் அதிக மதிப்பெண்ணும் வாங்க முடியாமல், அவரின் தனித்திறமையையும் உணரப்படாமல் "இரண்டும் கெட்டவராக" ஆகிவிடுவார்கள். பள்ளிகளே! குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் உங்கள் "நேர்முகத்தேர்வு" வேண்டாம் எனவில்லை! வரும் விண்ணப்பங்களில் இருந்து பத்து சதவிகிதம் தான் நீங்கள் தேர்வு செய்ய முடியும் எனில், உங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை என்னால் உணர முடிகிறது. அதை நடைமுறைப்படுத்துவதில்  மாற்றம் வேண்டும் என்றே கூறுகிறேன்!  எல்லா பள்ளிகளும் முதல் மதிப்பெண் வாங்குவது என்பது சாத்தியமே இல்லை என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்; அதே மாதிரி எல்லா மாணாக்கர்களும் முதல் மதிப்பெண் பெறுவதும் சாத்தியம் இல்லை. ஆனால் எல்லோரையும் அவரவர் திறனறிந்து (அதற்கு தகுந்தாற்போல்) வெற்றிப் பெறச் செய்வது நிச்சயமாய் சாத்தியம்!  நாம் உருவாக்கவேண்டியது (மாணவக்) கண்மணிகளை! சொன்னதை மட்டும் செய்யும் (சிந்தனையற்ற) கணினிகளையல்ல!! என்பதை தெளிவாய் புரிந்துகொள்வோம்.                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக